
கரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, இறப்பு விகிதமும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக நாடுகள் பலவும் இந்த மருந்தைத் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கோரிக்கை வைத்தன. இதனை ஏற்ற இந்திய அரசும் பல நாடுகளுக்கு இந்த மருந்தை ஏற்றுமதி செய்தது. இதனிடையே, ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், இதய கோளாறுகளை உண்டாக்கும் எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 671 மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்குள்ளான 96,000 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15,000 நோயாளிகளுக்கு ஆண்டிபாடியுடன் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிகிச்சை நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பை ஏற்படுத்துவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் சிலருக்கு இருதய நோய் அதிகரித்திருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதவாது சாதரண நோய் எதிர்ப்பு சக்திகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்றவர்கள் 8% பேருக்கு கூடுதலாக இதய நோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.