Skip to main content

"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" - ஹெச்.ராஜா பேட்டி!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
HRAJA


புதுச்சேரிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்ளுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


"கரோனா நோய் தொற்றினால் 182 உலக நாடுகள் இன்று நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்தான் கரோனா பாதித்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களாக கை கொடுத்துள்ளது. ஜூலை இறுதியில் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடி இருக்கும் என்று வெளிநாட்டு பத்திரிகை எழுதியது. அதை பொய்யாக்கும் வகையில் தக்க நேரத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதற்கும், உயிர்பலி குறைந்ததற்கும் காரணம். கொத்து, கொத்தாக உயிர்பலி ஏற்பட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன. சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதற்கு துணை போகின்றனர். அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மக்களை தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் செய்யக்கூடாது.

 

 


மத்திய அரசின் திட்டங்கள் எதையும் புதுச்சேரி மாநில அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கிய கரோனா நிதியில் 15 சதவீதம் கூட புதுச்சேரி அரசு செலவிடவில்லை. மத்திய அரசுக்கான நிதி வருவாய் குறைந்த நேரத்திலும் தமிழகத்திற்கு மட்டும் ரூ.3,760 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் மின் இழப்பு 15 சதவீததிற்கு மேல் உள்ளது. இது 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் விநியோகத்தில் ஏற்படும் திருட்டில் இருந்து தடுக்கவே மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மோடி அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை தடுக்காது. அதேநேரம் மாநில அரசுகள் கொடுக்கும் எந்த வித மானியத்தையும் நிறுத்த மத்திய அரசு நிர்பந்திக்காது என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.