அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் உத்தம் டாட்டி. இந்த சிறுவனுக்கு வயது 11 ஆகிறது. இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சிறிய ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றை ஒரு பெண் தனது குழந்தையுடன் கடக்க முயற்சித்துள்ளார். கடக்கும் போது அந்த ஆற்றில் நீரின் அளவு குறைவாக இருந்த நிலையில், திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்றை கடக்க முயன்ற பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்த சிறுவன் உத்தம் டாட்டி, உடனடியாக ஆற்றில் குதித்து, அந்த பெண் மற்றும் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அந்த மாவட்ட ஆட்சியர் லக்கியா ஜோதி தாஸ், ஆற்றை கடக்க முயன்ற பெண் மற்றும் குழந்தையை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் இந்த சிறுவனின் வீரச்செயலை தேசிய அளவில் அங்கீகரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுள்ளது என தெரிவித்தார். இந்த குறைந்த வயதில் சிறுவனின் துணிச்சலான வீர செயலுக்கு, அப்பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.