Skip to main content

“நாளொன்றுக்கு 15 முதல் 25 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி!” - ஈரோடு ஆட்சியர் தகவல்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

"Only 15 to 25 people per day will be vaccinated" Collector who inspected the corona vaccine Erode

 

கரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு அவற்றை நாடு முழுவதும் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான தடுப்பூசி ஒத்திகை முகாம்களை நடத்திடவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டத்திலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்றன. 


ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகை முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். தடுப்பூசிக்கு வருபவர்களுக்கான விசாரணை அறை, தடுப்பூசி அறை, ஓய்வெடுக்கும் அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும்படி  ஒத்திகைப் பார்க்கப்பட்டது. 

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட ஆட்சியர் கதிரவன், “ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 28 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 908 நபர்கள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 483 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பி இருக்கின்றனர். மேலும் தற்போது, 280 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 


மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்றது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்ப் பாதிப்புள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. 


தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள விரும்புபவர்கள், ஆன்லைன் மூலமாகவோ, அரசு சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாளொன்றுக்கு 15 முதல் 25 நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசி இரண்டு முறை செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதால், முதல்முறை போட்டுக்கொள்ளப்பட்டது குறித்தும் இரண்டாம் முறை போட்டுக்கொள்ள வேண்டிய தேதியும் செல்ஃபோன் மூலம் தெரிவிக்கப்படும். 
 

cnc


ஏனைய தடுப்பூசிகளைப் போல் உடனடியாக செலுத்தக் கூடிய தடுப்பூசி இல்லையென்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்து பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள், கேரள மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள், கோயம்புத்தூர், திருப்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உதவியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.