
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் நேற்று (20.05.2025) தரமணியில் இருந்து ஆலந்தூரை நோக்கி அவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 05:30 மணியளவில் கிண்டி மடுவின்கரை பாலத்தின் மீது இவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயத்தில் இவர் மது போதையில் இருந்ததன் காரணமாக அவர் காரை தாறுமாறாக ஓட்டி, அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஈக்காட்டுத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மீது மோதியுள்ளார்.
இதனால் அவர் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மேலும் அவருக்குக் காலில் எலும்பு முடிவு ஏற்பட்டது. இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள், செந்தில் குமாரை விரட்டி சென்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் அவரை கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைமைக் காவலர் செந்தில்குமார் தரமணி ரயில்வே மைதானம் அருகே பெட்ரோல் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் விபத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.