Skip to main content

மின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்! முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கண்டன போராட்டம்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
K. Balabharathi

 

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தாக்குதல் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தாக்குதல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள  வீடுகள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழக மின் வாரியம் மின் கணக்கீடு செய்யாமல் இருந்தது.

ஆனால் தற்பொழுது தமிழகம் முழுவதும் மின் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கணக்கீடு என்ற பெயரில் மின்வாரியம் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்தும் மின்வாரியத்தின் மின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மார்ச், ஏப்ரல் மாத மின் கணக்கீட்டை தனியாகவும், மே, ஜூன் மாத கணக்கீட்டை தனியாகவும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் பழனி புறவழிச்சாலையை அடுத்துள்ள மீனாட்சி நாயக்கன்பட்டி செயல்பட்டுவரும் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக பழனி புறவழிச் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தமிழக அரசுக்கு எதிராகவும் மின் வாரியத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலபாரதி, தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய கொள்ளை நடத்தி வருகிறது. பலதரப்பட்ட மக்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுத்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த கரோனா காலத்தில் நான்கு மாதத்துக்கு மொத்தமாக மின் கணக்கீட்டை எடுத்து அதை இரண்டாக பிரித்து புதிய மின் கட்டணமாக மக்கள் தலையில் சுமத்தி வருகிறார்கள். இதனால் வீடுகளில் மின் கட்டணம் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வருகிறது. 

கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு 100 யூனிட் இலவசமாக பயன்படுத்தி வந்த மக்கள்கூட இன்றைக்கு ஆயிரக்கணக்கில் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடனடியாக  மின்சார வாரியம் மின் கட்டணத்தை பரிசீலனை செய்ய வேண்டும். அதுவும் இந்த கரோனா காலத்தில் மின்சார கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த கரோனா காலத்தில் அரசு ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பு மக்களுக்கு நிவாரணமாக கொடுத்துவிட்டு, இப்போது மின்கட்டணம் மூலம் ரூபாய் 3 ஆயிரம் வரை ஏழை, எளிய மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான மின் கட்டணத்தை தமிழக அரசுக்கு கொடுக்க முன் வர வேண்டும்.

அதுபோல் 2020 மின் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் மக்களிடம் மின் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார். 

அதன்பின் மாவட்ட மின்வாரிய அதிகாரியான வினோத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் கோஷ் மற்றும் தாதன் கோட்டை ஆறுமுகம் உள்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.