Skip to main content

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை...மம்தா அரசு நீடிப்பதில் சிக்கல்!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை தேர்தல் முடிந்த பிறகும் வன்முறை தொடர்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியின் தொண்டர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டு வன்முறை ஏற்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

 

west bengal cm

 

 

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை அழைத்து பேசினார். அதில் மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்ட கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆளுநர் அழைத்து பேசிய சில நாட்களில் மீண்டும் அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பாத்பாரா பகுதியில் சனிக்கிழமை அன்று மீண்டும் வன்முறை மூண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பாஜக தொண்டர்கள் உயிரிழந்தனர். இதனிடையே பாத்பாரா பகுதியில் பாஜக கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான குழு காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில்  நலம் விசாரித்து, 2 பாஜக தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை  ஆய்வு செய்து திரும்பிய நிலையில் மீண்டும் அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

 

 

west bengal cm

 

 

அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும், கையெறி குண்டுகளை வீசி இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். கலவரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் அசாதாரண நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்