Skip to main content

மத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் விமர்சனம்!

Published on 29/04/2021 | Edited on 30/04/2021

 

nirmala sitharaman

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு  கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.

 

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர், கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கரோனா இரண்டாவது அலை காரணமாக நிகழ்ந்து வரும் மோசமான பாதிப்பின் மீது, மத்திய அரசு உணர்ச்சியற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கிறது என கூறியுள்ள அவர் "பிரதமரின் புகழ் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் இதயமற்றத் தன்மையை ஈடுசெய்கிறது. உணர்ச்சியற்ற தன்மையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோபத்தை அவர்களால் தணிக்க முடியும். ஆனால் புகழ் மற்றும் அரசியல் மூலதனம் ஆகியவை எந்தவித அறிவிப்பும் தராமல் வெளியேறும் பழக்கம் கொண்டவை. உணர்வற்ற தன்மை என்றென்றும் நிலைத்திருக்காது. இரக்கம், வெளிப்படைத்தன்மை, பச்சாதாபம் நீடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், "இறப்புகள் குறைத்து பதிவு செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பது, ஏராளமான உடல்கள் எரிக்கப்படுவது, மருத்துவமனைகளில் ஸ்ரெட்ச்சர் மற்றும் படுக்கைகள் அதிகரிப்பது, அங்கு உறவினர்கள் கூக்குரலிடுவது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகின்றன” என கூறியுள்ளார்.

 

"அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, தேர்தல்கள் முக்கியம். மதத் தலைவர்களைப் பொறுத்தவரை, மத அடையாளத்தின் மறுமலர்ச்சி முக்கியம். பொது சுகாதாரம் அல்லது மக்களின் வாழ்க்கை மீதான அவர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைவு. நமது தொலைக்காட்சிகள், மக்கள் பேரணிகளுக்காக அணிதிரட்டப்படுவதைக் காட்டுகின்றன. சேதம் ஏற்பட்டபின், மதத் தலைவர்கள் கும்பமேளா இனிமேல் அடையாள விழாவாக நடக்கும் என கூறினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணிகளை ரத்து செய்வதாக அறிவித்தார். திரிணாமூல் மற்றும் பாஜக ஆகியவை கரோனா தடுப்பு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறி பேரணிகளைத் தொடர்கின்றன" எனவும் பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "இதைக் கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. அவர்கள் நம் நோய்த்தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் இதயமற்ற வகையில் நாடுகளுக்கு இடையேயான ஒப்பீடுகளையும், தேர்தெடுக்கப்பட்ட விஷயங்களை மட்டும் ஒப்பிடுகிறார்கள். நாடுகளிடையேயான ஒப்பீடுகள் கூட குறைபாடுகள் உள்ளவை. நமது தொற்று பாதிப்பு விகிதம், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகியவற்றைவிட அதிகம். இது நாம் யோசிக்க வேண்டிய விஷயம்" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.