Skip to main content

வேகமெடுக்கும் கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 27/05/2025 | Edited on 27/05/2025

 

Corona infection Number of infected people increasing india

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மேலும், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. 

இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் கொரோனா பரவி கடந்த 1 வாரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா நோற்று தொற்று பரவி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால் 1,009 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக, கேரளாவில் 430 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியிலும் 104 பேரும், தமிழ்நாட்டில் 69 பேரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி திருவிழாக்கள் போன்றவற்றில் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்