Skip to main content

பிச்சைக்காரனாக இருந்தால் தப்பில்லை, ஆனால் பிச்சைக்கார புத்தியோடு இருந்தால்..!! - அதிமுக மீது ரெய்டு நடத்திய வேலுச்சாமி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

gjh

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், தங்கம், வைரம் ஆகியவற்றைக் கைப்பற்றிவந்த நிலையில், இந்திய வரலாற்றில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில், கே.சி. வீரமணி வீட்டில் நூற்றுக்கணக்கான யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி பார்ப்பது, அதிமுக தலைமை சொல்வதுபோல் இது பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது சட்டப்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை திருச்சி வேலுச்சாமி அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு, 

 

பெரியாரின் பிறந்த தினம் தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதே தினத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால் சிலர், பிரதமர் மோடி பிறந்தநாள்தான் உண்மையான சமூகநீதி நாள் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதற்கும், வான்கோழி சிறகை விரித்து ஆடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இதற்குப் பொருந்தும். மயில் ஆடுகிறதே என்று பொறாமைப்பட்டு வான்கோழியும் ஆடுவது மாதிரிதான் இந்தப் பேச்சு இருக்கிறது. இந்த இருவரையும் யார் ஆதரிக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் நாம் இந்த கேள்விக்குப் பதில் கூறமுடியும். பாமரன், பஞ்சமன், பாதசாரிகள் என அடித்தட்டு மக்கள் எல்லாம் பெரியாரை ஆதரிக்கிறார்கள். மோடியை யார் ஆதரிக்கிறார்கள், அம்பானி, அதானி, மிட்டா மிராசுகள் ஆதரிக்கிறார்கள். இதிலிருந்தே நாம் இந்த கேள்விக்குப் பதிலைப் பெற்றுவிடலாம். எனவே இந்த இருவரில் யார் சமூகநீதிக்குப் பொருத்தமானவர்கள் என்பதை இதைப் பார்க்கும் மக்களே முடிவெடுத்துக்கொள்ளலாம். 

 

சில நாட்கள் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. இந்த சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

தொடர்ச்சியாக நடக்கப் போகிற விஷயம்தானே இந்த ரெய்டு. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், வீட்டில் ரெய்டு வந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தற்போது ஒருவித நிம்மதி அடைந்துள்ளார்கள், ஆனால், மற்றவர்கள் எப்போது ரெய்டு வருமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். நான் எதிர்பார்த்தது அந்த மணிக்கு அப்புறம் வேறு மணியை, ஆனால் ரெய்டு வேறொரு மணி வீட்டில் நடைபெற்றுள்ளது. எல்லார் வீட்டிலும் ரெய்டு போக வேண்டிய அவசியம் இருக்கிறது. என்ன ஒன்னு கூடக்கொறைய இருக்கும். அவர் 10 ஆயிரம் கோடி என்றால், இவர் 9 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருக்கும். எல்லார் வீட்டுக்கும் ரெய்டு போகப் போறது உறுதி. எப்போது வரும் என்பது தெரியாது. 

 

பொதுவாக ரெய்டு நடத்தப்படும் இடங்களில் தங்கம், பணம், பொருட்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். ஆனால், முதல்முறையாக மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், பிச்சைக்காரனாக இருந்தால் தப்பில்லை, ஆனால் பிச்சைக்கார புத்தி இல்லாமல் இருக்க வேண்டும் என்று. மூன்று கிலோ தங்கம் எடுத்துள்ளார்கள், வைரம் எடுத்துள்ளார்கள். ஆனால் இதுல மணல் வேற. இந்தப் பிச்சைக்கார புத்தி இன்னும் போகல போல. 

 

முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படுகிற ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளதே? 

 

இப்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனால், அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது ஆர்.கே. நகர் தேர்தலின்போது அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் டைரி கைப்பற்றப்பட்டு யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது ‘இது பழிவாங்கும் நடவடிக்கை’ என்று இந்த இரட்டையர்கள் ஏன் கூறவில்லை? தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், துணை முதல்வர் இருக்கும்போதே ரெய்டு நடத்தப்பட்டதே, அதுவும் பாரா மிலிட்டரி படையை வைத்துக்கொண்டு சோதனை நடத்தினார்களே, அப்போதாவது சொல்ல வேண்டியதுதானே, ‘இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று. ஆனால் தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் ரெய்டு நடவடிக்கை எடுத்தால் மட்டும் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? 

 

 

Next Story

“விஜயகாந்த் வீட்டில் பாதுகாத்து வந்த பொக்கிஷம்” - திருச்சி வேலுச்சாமி

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Trichy Veluchami shared about the photograph kept at Vijayakanth house

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயகாந்த் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டவை, “தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரரை போல என்னுடன் பழகிய அன்பு சகோதரர் விஜயகாந்த் மறைந்திருக்கிறார். அதிமுக எனும் தனிக் கட்சியை எம்.ஜி.ஆர் வைத்திருந்தாலும், நான் சாகும் வரை காமராஜர் தான் எனது தலைவர் என்று கூறியது போல், விஜயகாந்த்தும் தனியாக தேமுதிக என்ற தனி கட்சியை வைத்திருந்தாலும் நான் காமராஜரின் தொண்டன் தான் என்று சொல்லியதற்கு என்றும் தயங்கியது கிடையாது. 

கடைசி வரை கதர் வேஷ்டி சட்டை அணிவதில் பெருத்த மகிழ்ச்சி கொண்டவர் விஜயகாந்த் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவரது வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு புகைப்படம், பலருக்கு தெரியாது, விஜயகாந்திற்கு 5 அல்லது 6 வயது இருக்கும் போது காமராஜர் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது காமராஜருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது வீட்டில் பொக்கிஷமாக வைத்திருந்தார். அரசியல் களத்தில் இருந்தாலும், திரைத்துறையில் பல சாதனைகளை செய்தாலும் மனிதனாகவே வாழ்ந்தார். சக மனிதனை மதிக்கக் கூடிய பெரிய பண்பாளர். அவரது இழப்பு மிகவும் ஈடுசெய்யமுடியாத ஒன்று. நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சக மனிதனை மதிக்கக் கூடிய பண்பை விஜயகாந்த்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.