Skip to main content

“இவ்வளவு பெரிய தண்டனை பாஜகவில் மட்டுமே கொடுப்பார்கள்; திருச்சி சூர்யா எப்படி தாங்கப் போகிறாரோ? ” - புதுமடம் ஹலீம் பொளேர்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

பரக

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புதுமடம் ஹலீம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். அவரின் பதில் வருமாறு, "அந்த ஆடியோவை பீப் சவுண்டோடுதான் நாம் அனைவரும் கேட்டோம். அவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகள் அடங்கிய ஆடியோவாக அது இருந்தது. 

 

தற்போது திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்கள். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்படும் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அதில் என்ன தண்டனை கொடுத்தார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.  இதை எல்லாம் தண்டனை என்று பாஜகவில் மட்டும்தான் கொடுப்பார்கள். இவ்வளவு பெரிய தண்டனையை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.  

 

இன்றைக்கு பாஜக கட்சியினர், அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடந்த சில மாதங்களாக என்ன கூறி வருகிறார்கள்; தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வரக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது என்று வாய்க்கு வந்ததை எல்லாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்கள். பெண்களிடம் பிரச்சனை செய்தால் கையை வெட்டுவோம் என்ற வரைக்கும் பேசினார்கள். இப்போது எதை வெட்டுவார்கள் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அடுத்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூறினால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று குதிக்கும் அண்ணாமலை இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசியவரையும் சேர்ந்து கட்சியை விட்டு நீக்குகிறார். 

 

திமுகவில் ஒருவர் குஷ்புவைப் பற்றிப் பேசியதற்கு இவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் பேசியது தவறு என்பதை யாரும் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவைச் சேர்ந்த கனிமொழியே இந்த விவகாரத்தில் குஷ்புவின் பக்கம் நின்று பேசினார்கள். அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் தற்போது பாஜகவில் நடைபெற்றுள்ள சம்பவம் சொந்தக் கட்சிக்குள்ளாகவே நடைபெற்றுள்ளது. அதைவிட மோசமான பீப் சவுண்ட் இல்லாமல் கேட்க முடியாது என்ற அளவில் இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.

 

ஆனால் இப்போது நடைபெறும் இந்த விவகாரத்தை எப்படி மூடி மறைக்கலாம் என்றே அவர்கள் திட்டமிடுகிறார்கள். அடுத்த கட்சி என்றால் பாய்வதும், சொந்தக் கட்சி என்றால் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதும்தான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது. அவர்கள் பேசிய ஆடியோ கூட நான் அண்ணாமலை அவர்களுக்கும், மற்ற கட்சியில் உள்ள மூன்று தலைவர்களுக்கும் கொடுத்துவிட்டேன் என்றுதான் ட்விட் போட்டுள்ளார். இன்னமும் கூட அந்த ட்விட் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர்களிடம் இருந்த இந்த ஆடியோ எப்படி வெளியே சென்றது. இதற்கான மூலத்தைக் கண்டறிய வேண்டும். ஆனால் இது எதுவுமே பாஜகவில் நடைபெறாது." என்றார்.

 


 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.