Skip to main content

BIG BREAKING! ராமஜெயம் கொலை வழக்கில் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக துப்பு!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Trichy Ramajayam case

 

சமீபத்தில் ராமஜெயம் கொலை குறித்து துப்பு கிடைத்துள்ளது என பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, "ராமஜெயம் படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள், தொடர்புடைய நபர்கள் குறித்து எந்தவொரு தகவல், எவருக்குத் தெரிந்தாலும் சரியான தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்குவதுடன், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும்" என்று மடைமாற்றியது எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு. அந்த பிரத்யேக துப்பு "நக்கீரனுக்கு' கிடைக்க, அதன் வழியில் பயணமாக பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

வழக்கின் பாதை:

 

அமைச்சர் நேருவின் தம்பியும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்திய ராமஜெயம் கொலைக்கான புதிர் அவிழ்க்கப்படவுள்ளது என்கிறது உளவு வட்டாரம்.

 

29/03/2012 அன்று திருச்சி - கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள முட்புதரில் ஆசிட் ஊற்றப்பட்டு, கட்டுக்கம்பிகளால் உடல் கட்டப்பட்டு, போர்வையால் சுற்றப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் ராமஜெயம். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தபோதிலும், முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால், அதே வருட ஜூனில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.


தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்ய, 2015-ஜூன் 12-ஆம் தேதி மனு விசாரணையின்பொழுது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்றும், விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டு, ஜூலை 24-வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கடுத்த நாட்களில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால் சி.பி.ஐ. துணைகொண்டு எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி. மதன், சி.பி.ஐ. டி.எஸ்.பி. ஹரி மற்றும் பல்வேறு பிரிவு போலீஸார் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவினை அமைத்தது தமிழ்நாடு அரசு.

 

தொடக்ககால ட்விஸ்டுகள்:

 

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை சந்தேக வளையத்திற்குள் இருந்த கொலைசெய்யப்பட்ட ராமஜெயத்தின் உதவியாளர்கள் நந்தகுமார், 'கேபிள்' மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். அதன்பின் ராமஜெயம் வழக்கு மீண்டும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாறிவிட்டது.

 

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ‘அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டவுடன், அவருக்கு இந்தக் கொலை பற்றி தெரியுமா என்று இரண்டு நாட்கள் எஸ்.பி. அன்பு தலைமையிலான குழுவினர் மதுரைக்கு வந்து அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடத்தினர். அதிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அதேவேளையில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக், பெரியசாமி ஆகியோர் "ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்துவரும் திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி தொந்தரவு செய்துவருகிறார். எது சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டால் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். விசாரணைக்காக சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது. எனவே, விசாரணை என்ற பெயரில் எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாதென உத்தரவிட வேண்டும்' என மனுத் தாக்கல் செய்ய, அப்பொழுதும் பின்னடைவைச் சந்தித்தது சி.பி.சி.ஐ.டி.

 

நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக துப்பு:

 

இது இப்படியிருக்க, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொலைத்த இடத்திலிருந்து தேடவேண்டுமென்பதால் கொலை நடந்த இடம், வழக்கமாக வாக்கிங் செல்லும் பாதை, பொன்னி அபார்ட்மெண்ட்ஸ், காவிரிக்கரையின் வடகரை என துழாவத் தொடங்கியது. இதில் வீட்டிலிருந்து அதிகாலை 5.15 மணியளவில் நடைப்பயிற்சிக்காக வெளியில் புறப்பட்ட ராமஜெயத்தின் செல்போன் 5:45 மணியளவில் கோட்டை ரயில் நிலையமருகே அணைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 8:15 மணியளவில் பிணமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

 

Trichy Ramajayam case

 

இப்பொழுதுபோல அப்பொழுது செல்போன் டவர் துல்லியமாகத் தெரியாது. சுமார் 2 சதவிகிதம் தெளிவாகக் கிடைக்கும். அதாவது, அப்பொழுது செல்போன் அணைக்கப்பட்டால் அது சுற்றியுள்ள 6 கி.மீ வரை காண்பிக்கும். துல்லியமாக எந்த இடத்தையும் கூறாது. இவரது போன் அணைக்கப்பட்ட பிறகு டவர் ரேஞ்சின் மையப் புள்ளியைக் கணக்கிட்டால், 8.3 கி.மீ தொலைவில் இவரது உடல் கிடைத்துள்ளது. கிடத்தப்பட்ட உடலின் கண், அருகிலுள்ள பொன்னி டெல்டா அபார்ட் மெண்ட்ஸையும், வலது கை கரூரை நோக்கியும், இடது கை சென்னை பைபாஸை நோக்கியும் இருக்குமாறு அமைந்துள்ளது.

 

இதில் நீதிபதி மணி, போலீஸ்காரர் வாக்குமூலங்கள் தவிர அந்த அபார்ட்மெண்டின் மேனேஜரின் வாக்குமூலம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதுதான் இந்த வழக்கின் பிரத்யேக துப்பு. அவரது வாக்குமூலத்தின்படி வடகரையில் அந்த பொழுதில், மாருதி கம்பெனியை சேர்ந்த வாகனம் ஒன்று வந்ததாகவும், அதனுடைய எண் TN 6*** என்பது போல் பார்த்ததாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில் அந்த வாகனம் Maruti Versa  வாகனம் எனக் கண்டறியப்பட்டது. செல்போன் அணைக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையம் ரவுண்டானாவில் இருந்த சி.சி.டி.வி.யில் அந்த Maruti Versa  வாகனம் கடந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

 

அத்துடன் 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2012ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட சுமார் 1400 அந்த ரக வாகனங்களின் உரிமையாளர்களின் காண்டக் சர்டிபிகேட் அலசி ஆராயப்பட்டு வருகின்றது'' என்கிறார் அந்த குழுவினைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.


186 குண்டூசித் துளைகள்:


ராமஜெயம் கடத்தப்பட்ட பிறகு, டூவீலரின் பிரேக், ஆக்ஸி லேட்டர் கேபிள்களால் கைகால் கட்டப்பட்டு, உடலெங்கும் கட்டுக்கம்பிகளால் கட்டப்பட்டு ஏறக்குறைய 1 மணி நேரம் குறிப்பிட்ட "அந்த" நபரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு, அந்த நபர் வந்தவுடன் நேரில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கின்றார் ராமஜெயம். வந்த நபரோ குண்டூசிகளால் ராமஜெயத்தின் உடலெங்கும், ஏறக்குறைய 186 குண்டூசி அளவிலான துளைகள் இட்டபின்னரே, கொலை செய்யப்பட்டிருக்கிறார் ராமஜெயம் என தெளிவாக குறிப்பிடுகின்றது ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை.

 

Trichy Ramajayam case
எஸ்.பி. ஜெயக்குமார்

 

காரணங்கள் ஐந்து:


ராமஜெயம் கொலையில் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக, பெண்கள் விஷயத்தில் ராமஜெயம் சபலம் என சொல்லப்படுகிறது. இதில், காதல் விவகார பிரச்சினை ஒன்றில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த ஒரு நபருக்கு எதிராக பஞ்சாயத்து பேசியதோடு மட்டுமல்லாமல், அவருடைய காதலியையே சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள பொன்னி டெல்டா அபார்ட்மெண்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாகவும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர் ஒருவரின் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், கோவை மாவட்ட என்.ஜி.ஓ. அமைப்பினைச் சேர்ந்த பெண்மணியிடம் சில்மிஷம் செய்ததும் கொலைக்கான காரணமாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல், ரூ. 1000 கோடி பஞ்சாயத்து ஒன்றில் தலையிட்டதும், மணல் விவகாரத்தில் தலையிட்டதும் கொலைக்கான கூடுதல் காரணமாக முன்வைக்கப் படுகின்றது.

 

ஆந்திரா ஸ்டைலும், அந்தோனியும்:


"உடலெங்கும் கட்டுக் கம்பிகளால் சுற்றப்பட்டு, வாயில் உறுப்பை வைத்து கொலை நடந்திருப்பதைப் பார்த்தால் இது ஆந்திரா ஸ்டைலே! ஆந்திராவில் நடந்திருக்கும் கூலிக் கொலைகள் அனைத்தும் இதே மாடலிலே நடந்திருக்கும். அதாவது முதலாவது அடியே எதிராளியை நிலைகுலைய வைப்பதுபோல் இருக்கும். ராமஜெயம் கொலையிலும் அவ்வாறே நடந்திருக்கின்றது. ராமஜெயத்தின் பின் மண்டையில் அடித்த அடிதான் அவரை நிலைகுலைய வைத்து உயிர்போகக் காரணமாக இருந்திருக்கின்றது.

 

அதுபோக இதே மாடல் கொலைகள் இலங்கையிலும் நடப்பது வழமையான ஒன்று. இந்த கொலைக்கான ஸ்கெட்ச் அனேகமாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உருவாகியிருக்கும். அங்கேயிருந்த இலங்கையைச் சேர்ந்த அந்தோனி தனக்கு நெருக்கமான ஆந்திரக் கூலிகளிடம் இந்த அசைன்மெண்டை ஒப்படைத்திருக்கலாம். அந்தோனியைத் தொட்டால் கூலிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல'' என்கின்றார் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர்.

 

"ராமஜெயம் கொலையைப் பொறுத்தவரை 120-பி பிரிவின்படி கொலையின் சூத்ரதாரியை நெருங்கிவிட்டது சிறப்புப் புலனாய்வுக் குழு. ஆனால், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், இதனால்தான் கொலை நிகழ்ந்தது, இன்னார்தான் கொலையாளிகள்...' என அறியும்வரை பதைபதைப்பு நிச்சயமே!

 

படம்: விவேக்

 

 

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.