Skip to main content

“படித்துக்கொண்டே மேயர் பொறுப்பையும் கவனிப்பேன்!” - ஆர்யா ராஜேந்திரன் சிறப்புப் பேட்டி..!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Interview with thiruvananthapuram 21 year old Mayor

 

கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், ஆளும் பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணிக்கு, அக்னிப் பரீட்சைதான். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு, உள்ளாட்சித் தேர்தலைப் பதமாக எண்ணிப் பாய்ச்சலைக் காட்டியது எல்.டி.எஃப். அதே சமயம் எல்.டி.எஃப். அணியை ஒரு வழியாக்கிவிட வேண்டுமென்று காங்கிரசும் வியூகமெடுத்தது. அடுத்த சவாலாக மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், எல்.டி.எஃப்பை வீழ்த்த துணைக்கட்சிகளை இணைத்துக்கொண்டும், கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம் போன்றவைகளை வலுவான ஆயுதமாகவும் பினராய் அரசுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

 

இதுபோன்று எல்.டி.எஃப். அணிக்கு, திரும்பிய பக்கமெல்லாம் கடும் நெருக்கடி. ஆனாலும் இவை அனைத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாத பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணி, ஆட்சியின் சாதனையை முன் வைத்தே பிரச்சாரத்தைக் கொண்டுசென்றது.

 

இந்தத் தேர்தலில், எல்.டி.எஃப்-ன் உறுப்பு அணிகளான டி.ஒய்.எஃப்.ஐ., எஸ்.எஃப்.ஐ. உள்ளிட்ட அணிகள் தரைச்சக்கரமாய் சுற்றி தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக எல்.டி.எஃப். அணியின் வேட்பாளர்களில் 20 சதவீதம் பேர் இளைஞர் பட்டாளம்.

 

விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் முதன்மை ஸ்தானத்திற்கு வந்த எல்.டி.எஃப். அணி, குறிப்பாக மாநிலத்திலுள்ள 6 மாநகராட்சிகளில், ஐந்து மாநகராட்சியைத் தன் வசப்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 55 வார்டுகள் எல்.டி.எஃப். அணியும், பா.ஜ.க. 35, காங்கிரஸ் 10 வார்டுகள் என்ற அளவில் கைப்பற்றியுள்ளன.

 

இதில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக யாரைத் தேர்வு செய்வது என்பது பற்றிய நிலைப்பாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் ஆய்வுக்கு வந்திருக்கிறது.

 

விவகாரத்தின்போது கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றி சி.பி.எம்.-ன் மேல்மட்டப் பொறுப்புவரை வளர்ந்தவரும், துணிச்சலாக பிரச்சனைகளை அணுகுபவருமான (21 வயது கல்லூரி மாணவி) ஆர்யா ராஜேந்திரனை வரும் 28ஆம் தேதி மேயராக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

திருவனந்தபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மற்றும் சட்டம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவிதான் ஆர்யா ராஜேந்திரன். இந்தத் தேர்தலின் மூலம், 21 வயதேயான 'இளம்பெண் மேயர்' என இந்தியாவின் பார்வையை இடது சாரிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

 

வாடகை வீட்டில் வாழ்க்கை என்ற அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது மாணவி ஆர்யா ராஜேந்திரனின் குடும்பம். தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் தினக்கூலி லேபர். தாய் ஸ்ரீலதாவோ எல்.ஐ.சி.யின் ஏஜெண்ட் என வேலைபார்த்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் என்கிற குடும்பப் பின்னணியைக் கொண்டவர் மாணவி ஆர்யா ராஜேந்திரன்.

 

Interview with thiruvananthapuram 21 year old Mayor

 

நாம் அவரைத் தொடர்பு கொண்டபோது, பிசியான சூழலுக்கு மத்தியில் பேசத் தொடங்கினார். நம்முடன் பேசிய அவர், “வேலை பார்த்தால்தான் பாடு கழியும் குடும்பம் எங்களது. நான் 12 வயதிலேயே கம்யூனிஸ்ட், கொள்கைப் பிரச்சாரத்தில் கொடி பிடித்திருக்கிறேன். அப்போது சி.பி.எம்-ன் அங்கமான பாலசங்கத்தின் (சி.பி.எம்-ன் குழந்தைகள் அமைப்பு) மாநிலத்தலைவர். அப்போதிலிருந்தே கட்சிப் பயணம் தொடங்கியது. பின்பு பார்ட்டியின் உறுப்பினர். மாணவ அணியான எஸ்.எஃப்.ஐ. அடுத்து டி.ஒய்.எஃப்.ஐ. என்று பொறுப்புகளுக்குப் பிறகு தற்போது இந்திய கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பிலிருக்கின்றேன். எனக்கு எல்லாமே பார்ட்டிதான். கட்சியின் வேலைகள், மாணவர்களுக்கான பிரச்சனைகள் என நிறையச் செய்திருக்கேன். என்னுடன் பிறந்த அண்ணன் இஞ்சினியரிங் முடித்து இப்போது துபாயில் பணியில் இருக்கிறார்.

 

cnc


கட்சி என்மீது நம்பிக்கை வைத்து எங்களின் 47வது வார்டான முடவன்முகல் வார்டில் போட்டியிட வைத்தது. எங்கள் வார்டில் சி.பி.எம்., காங்கிரஸ், பி.ஜே.பி. சுயேட்சை என்று நான்கு முனை பலமான போட்டி. எனது மற்றும் எங்கள் பார்ட்டியின் செயல்பாடுகளால் 2,863 வாக்குள் பெற்று 549 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தார்கள் என் வார்டு ஜனங்கள்.

 

இந்தத் தேர்தல்ல எங்க பார்ட்டி எல்.டி.ஃஎப்.ஐ.யை இல்லாமல் பண்ணனும்னு காங்கிரஸ் ஒரு பக்கமும், மத்திய பி.ஜே.பி.அரசு, சி.பி.ஐ., ஐ.டி என்று விசாரணைத் துறையையும் ஏவியது. பல நெருக்கடிகள் கொடுத்தார்கள். பார்ட்டி இத்தனை நாளும் மேற்கொண்ட மக்கள் நலனுக்கான பணிகளின் ரிசல்ட்தான் இந்த அளவுக்கான வெற்றி. எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, கேரளாவில் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்தாங்க. பார்ட்டியின் துணையோடு கல்லூரியில் படித்துக் கொண்டே மேயர் பொறுப்பையும் கவனிப்பேன்” என்றார் நம்பிக்கையான குரலில்.

 

வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நுழைவுத் தேர்வில் உள்ளாட்சி மூலம் மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது எல்.டி.எஃப்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.