Skip to main content

நீ என்ன திருடனா? ஒழுங்கா உன் வீட்டிலுள்ள என் ஃபிங்கர் பிரிண்ட்ட அழித்திடு... சுஜி வழக்கில் மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்கள்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

suji



“ஒண்ணா? ரெண்டா? சுஜியால சீரழிஞ்ச பெண்களோட எண்ணிக்கை 90-க்கும் மேல இருக்கும். அவனோட செல்போனும் லேப்டாப்புமே இதைக் காட்டிக் கொடுத்திருச்சு. இந்த அளவுக்கு மோசமா நடந்தவன் வாயில இருந்து உண்மை எப்படி வெளிவரும்?

"அந்தப் பெண் டாக்டர் என்னை எப்பல்லாம் கூப்பிடுவாங்களோ, அப்பல்லாம் போனேன். பணமும் கொடுப்பேன். அப்புறம் என்னால பணம் கொடுக்க முடியல. ரொம்ப மிரட்டினாங்க. அவங்க சொன்னதுக்கு நான் உடன்படல. அந்தக் கோபத்துலதான் என் மேல பொய் புகார் கொடுத்திருக்காங்க'ன்னு வாய்க் கூசாம கோர்ட்ல பொய் சொல்லியிருக்கான்.’’


சுஜி என்றால் பயம்! 

அந்த டாக்டர் விவகாரத்தை அறிந்த காவல்துறை அதிகாரி ஒருவர், "புகார் கொடுக்கிற பெண்களை இப்படி அசிங்கப்படுத்திட்டா, வேற யாரும் புகார் கொடுக்க வரமாட்டாங்கள்ல. இத்தனைக்கும் அந்த டாக்டருக்கும் அவனுக்கும் அந்த மாதிரி உறவே நடக்கல. அவங்களயே இப்படிச் சொல்லிட்டான். நம்மள என்ன சொல்லப் போறானோன்னு மற்ற பெண்களுக்கு பயம் வந்திரும்ல. அப்புறம் எப்படிப் புகார் கொடுப்பாங்க? இங்கே இருக்கிற வக்கீல்கிட்ட சென்னையில காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கிற ஒரு பொண்ணு பேசிருக்கு. தைரியமா புகார் கொடும்மான்னு அவரு சொல்லிருக்காரு. அந்தப் பொண்ணுக்குச் சொந்த ஊரு திருநெல்வேலி போல. அங்கேயிருக்கிற வக்கீல் ஒருத்தர்ட்டயும் பேசிருக்கு. அப்ப வக்கீல் சொல்லிருக்காரு. "இதுக்கெல்லாம் பெரிசா தண்டனை கிடைக்காது. நீ ஏன் தேவையில்லாம மாட்டிக்கிற' என்றிருக்கிறார். அந்தப் பொண்ணு இந்த வக்கீலுக்கு போன் பண்ணி, "கம்ப்ளைண்ட் வேணாம் சார். இனி அவனால எனக்குப் பிரச்சினை வராதுன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. அதுவரைக்கும் சந்தோஷம்''னு சொல்லிட்டு கட் பண்ணிருச்சாம்.
 

suji


நீலம் படர்ந்த சுஜியின் கடந்த காலம் குறித்த தேடலில் இறங்கினோம்.

தனது உடல்வாகும், ‘அல்ட்ரா மாடர்ன்’ தோற்றமும், எதையும் சுலபத்தில் நம்பிவிடக்கூடிய இளம் பெண்களை எளிதில் வீழ்த்தி விடும் என்பதை, படிக்கும்போதே அனுபவரீதியாக உணர்ந்திருந்தான், சுஜி. பள்ளி மாணவிகளைக்கூட அவன் விட்டு வைக்கவில்லை என்பதற்குப் பெங்களூரு சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் எந்தப் பெண்ணுக்கும் ‘கொக்கி’ போடுவதெல்லாம், சுஜிக்கு கைவந்த கலை. அப்படித்தான், பெங்களூருவில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டான். அவளுடைய பெற்றோர் வீட்டில் இல்லாத நாட்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பி விடுவான். அவளுடைய வீட்டில் ஒருநாள் இரவு அவன் தங்கிவிட, விடிந்ததும் அவசர அவசரமாகப் பள்ளிக்குச் செல்ல அவள் ஆயத்தமானாள். இவனோ, படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அதனால் அவள், "நான் ஸ்கூலுக்கு போறேன். நீ வெளிய போகும்போது வீட்டுச் சாவியை இந்த இடத்தில் வைத்துவிட்டுப் போ" என்று சொல்லிவிட்டு சென்றாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, லேப் டாப் உள்ளிட்ட விலை யுயர்ந்த பொருட்களை சுஜி திருடிச் சென்றதை அறிந்து அவள் அதிர்ந்தாள்.
 

suji

 

வீட்டுக்குத் திரும்பிய பெற்றோரிடம் யாரோ பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று கூறினாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. "நீ என்ன திருடனா?' என்று சுஜியைத் தொடர்புகொண்டு அந்த மாணவி திட்ட, "ஒழுங்கு மரியாதையாக உன் வீட்டில் எந்தெந்த இடத்தில் என்னுடைய ஃபிங்கர் பிரிண்ட் இருக்கிறதோ, அதையெல்லாம் அழித்துவிடு. இல்லாவிட்டால், நீ அசிங்கப்பட்டு போவாய்' என்று மிரட்டியிருக்கிறான். இன்றும்கூட, அங்குள்ள காவல் நிலையத்தில், மர்ம நபர் திருடிச் சென்றதாகவே வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வசதியான பெண்களேயே குறி வைப்பான் சுஜி. தன்னுடன் பழகுபவர்களைக் காதல் கிறக்கத்திலேயே வைத்திருப்பதில் அவன் கில்லாடி. முதல் சந்திப்பிலேயே ‘நான் உன்ன மேரேஜ் பண்ணிக்கிறேன்‘ என்றுதான் ஆரம்பிப்பான். அடுத்து, "உன்னோட பாஸ்ட்ட பத்தி எனக்குக் கவலை இல்ல. என்னோட பாஸ்ட்ட பத்தி நீயும் கவலைப்படக் கூடாது. ஃப்யூச்சர பத்தி மட்டும் யோசிப்போம்" என்று யதார்த்தமாகப் பேசி நம்ப வைப்பான். திடீரென்று, ஒரு காரணமும் இல்லாமல் தன்னை நம்பிய பெண்ணிடம் சில நாட்கள் பேசவே மாட்டான். போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டான். அந்தப் பெண் தவித்திருக்கும் நிலையில், அவளது போன் காலை திடீரென அட்டெண்ட் பண்ணுவான். திட்டிவிட்டு லைனை துண்டித்து விடுவான். அன்றிரவு, அந்தப் பெண்ணிடம் வீடியோ காலில் பேசி ‘உன்னைப் பார்க்க வேண்டும். என்று உத்தரவு போடுவான். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுபோல அவளும் நடந்துகொள்வாள். அவன் ‘ரெகார்ட்’ செய்துவிட்டு, பின்னாளில் சாவகாசமாக பிளாக்-மெயில் செய்வான். இதே ஸ்டைலில் தான் தன்னிடம் பழகிய பெண்களிடமெல்லாம் பணம் பறித்திருக்கிறான். 

அவன் தங்குவதெல்லாம் நட்சத்திர விடுதிகளில்தான். அதற்கான செலவை, தன்னுடன் பழகிய பெண்களின் தலையில் கட்டி விடுவான். எப்படியென்றால், தன்னால் மிரட்டப்படும் பெண்ணிடம், ‘ஆன்-லைன்ல அங்கே ரூம் புக் பண்ணிடு’ என்று சொன்ன மாத்திரத்தில், அந்தப் பெண்ணும் அதைச் செய்துவிடுவாள். ஒரு பெண்ணின் செலவில் புக் செய்த ரூமில் இன்னொரு பெண்ணை அழைத்துச் சென்று அனுபவிப்பான். அந்த இன்னொரு பெண்ணோ, அடுத்து சுஜியால் மிரட்டலுக்கு ஆளாவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்.


சென்னையில் பிரபலமான அந்த நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தபோது, 20 நிமிடங்களில் நான்கைந்து பெண்களுக்கு போன் பண்ணியிருக்கிறான். மளமளவென்று அவனுடைய பேங்க் பேலன்ஸ் 2 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சம் ஆகியிருக்கிறது. அப்போது நண்பர்களிடம் சுஜி காலரைத் தூக்கிவிட்டு, "பணம் சம்பாதிக்கிறதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல'' என்று பந்தா பண்ணியிருக்கிறான்.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 90-க்கும் மேல் என்றாலும், ஒரே சமயத்தில் 30 பெண்கள் வரையிலும் தொடர்பில் இருப்பான். சலித்து விடும் நிலையில், தன்னுடன் பழகிய பெண்ணின் போன் நம்பரை, நண்பர்களுக்குக் கொடுத்து, தாராள பிரபுவாகிவிடுவான். ஏற்கனவே திட்ட மிட்டபடி அந்தப் பெண்ணிடம் சுஜி கோபமுகம் காண்பிப்பான். "நீ எதுக்குடி அவன்கிட்ட பேசின? என்கிட்ட பழகின மாதிரியே அவன்கிட்டயும் பழகிட்டல்ல... உன்ன எப்படி மேரேஜ் பண்ணுவேன்?'’ என்று டார்ச்சர் பண்ணுவான். நேரில் சந்திக்கும்போது அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்குவான். இதுதான், ஒவ்வொரு மிரட்டலின் போதும் பணம் காய்ச்சி மரமாகக் கொட்டியிருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் மாட்டவே கூடாது என்ற திட்டமிடலுடன், மலேசியாவிலுள்ள நண்பர்கள் மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்கு ஆரம்பித்துள்ளான். ஏமாந்த பெண்களுக்காக, அங்கங்கே நூல் பிடித்து தான் இருக்கும் இடம் தேடி வந்து 'ஏன்டா இப்படி பண்ணுன?' என்று யாராவது பஞ்சாயத்து பண்ண முயற்சித்தால், உள்ளூரில் செல்வாக்கான ஆளும்கட்சி புள்ளிகள், அதிரடி வழக்கறிஞர்கள், கந்துவட்டி பேர்வழிகளெல்லாம் கோதாவில் இறங்கி, வந்தவர்களை விரட்டியடித்து, சுஜியைக் காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவுக்கு அவர்களையும் குளிப்பாட்டியுள்ளான்.

அழிக்கப்படும் வீடியோக்கள்! 

தற்போது, போலீஸ் கஸ்டடியில் ஒரு கஷ்டமும் இல்லாதபடி, புது மாப்பிள்ளை ரேஞ்சுக்கு சுஜியை வைத்திருப்பதால், உண்மையிலேயே அது அவனுக்கு மாமியார் வீடாகிப் போனதாம். சுஜியை விசாரணைக்கு எடுத்துள்ள ஏ.எஸ்.பி. ஜவஹர் தலைமையிலான 3 தனிப்படை டீமும், சுஜியின் முக்கியக் கூட்டாளிகளான, அந்த 7 வி.ஐ.பி.க்கள் யாரென்று தெரிந்தும், கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில், காவல்துறை வட்டாரத்தில் நேர்மையான ஒருவரிடம் நம்மால் பேச முடிந்தது. “சுஜியிடமிருந்து கைப்பற்றிய செல்போன், லேப் டாப் போக, 4 டிபி மற்றும் 8 டிபி கொண்ட இரண்டு ஹார்ட் டிஸ்க்கில், 90-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களிடம் நடத்திய பாலியல் வேட்டை, 5 நிமிடங்கள், 15 நிமிடங்கள் ஓடக்கூடிய 400-க்கும் மேற்பட்ட வீடியோக்களாக உள்ளன. 14 வயது பள்ளி மாணவியைப் பாடாய்ப்படுத்தியதையும் பதிவு செய்திருக்கிறான். அவன் உல்லாசமாக இருந்த போது சில பெண்களிடம், மத்தியிலும், மாநிலத்திலும், சென்னையிலிருந்து டெல்லி வரை ஆளும் கட்சி பிரமுகர்களோடு தனக்குள்ள தொடர்பினை, அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே போதையில் உளறிய வீடியோவும் சிக்கியிருக்கிறது. அதனால், சில வீடியோக்களை காவல்துறையே ‘டெலிட்’ செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது'' என்றார் வேதனையுடன்.''
 

http://onelink.to/nknapp


தப்பிக்க விடக்கூடாது! 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புகார் தாரரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் நம்மிடம் "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோர்ட் ரொம்ப சிவியரா இருந்துச்சு. ட்ரையல் பொசிஷன் என்ன ஆச்சு? இந்த மாதிரி கேஸ்ல சாட்சிகள் கோர்ட்டுக்கு வந்து சொல்லுறதே பெரிய விஷயம். அப்படியிருக்கும்போது, காலம் கடந்து ட்ரையல் ஏற்றினால், குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். ஏனென்றால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கும். இல்லையென்றால், எதற்கு வம்பு என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால், இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக ‘சார்ஜ்-ஷீட்’ போடணும். ட்ரையல் எடுத்து நடத்தணும். இப்ப இருக்கிற போலீஸ் ஆபிசர் ட்ரான்ஸ்பர் ஆகி போய்விட்டால், அடுத்து வரும் ஆபீசர்கள், இந்த வழக்குக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவார்கள் என்று தெரியாது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்றால் முழுவதுமாக ஃபாலோ பண்ணுவாங்க. அதனால், காலதாமதம் இல்லாமல் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்'' என்றார்.
 

suji


சுஜியின் நண்பர்கள் வசதியானவர்கள் என்பதால், "இந்த வழக்குல எங்க பேரையும் இழுத்து விட்றாத. எத்தனை லட்சம்னாலும் தர்றோம். உன் கேஸயும் நாங்களே பார்த்துக்கிறோம்'’என்று உத்தரவாதம் தந்துள்ளனராம். இன்னொரு புறம், கல்லூரி மாணவிகள், வசதி படைத்த குடும்பப் பெண்கள், தங்களின் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைத்துவிடுவானோ என்ற அச்சத்தில் நடுங்குகின்றனராம். தன் வலையில் விழுந்தவர்களை சுஜி காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்கு, காவல்துறையினரைச் சரிக்கட்டுவதற்கு என, கூட்டாளிகள் மூலம் பெரிய அளவில் பேரம் நடந்து வருகிறதாம்.

காவல்துறை வாகனத்தில் ஏறும்போது ஆய்வாளர் சாந்தகுமாரியிடம் சுஜி "பத்திரிகையாளர்களால் எனக்கு பப்ளிசிடிதான்... எதிர்காலத்தில் இது எனக்கு வசதியாக இருக்கும்'' என்று 'கமெண்ட்' அடித்து சிரித்திருக்கிறான்.

‘பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு கிடைத்துவரும் ராஜமரியாதை எனக்கு மட்டும் கிடைக்காமலா போகும்?’என்று கஸ்டடியில் கெத்து காட்டுகிறானாம், சுஜி. இந்த நிலையில் சுஜியை என்கவுண்ட்டர் செய்யத் திட்டம் என கலெக்டரிடம் அவனது தந்தை மனு கொடுத்துள்ளார்.


-ராம்கி 

 

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.