Skip to main content

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை நடைப்பயணமாக கூட்டிவந்த எம்ஜிஆர்; 50 ஆண்டுகளுக்கு முன்னால் எம்ஜிஆர் செய்த சம்பவம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

kl;

 

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி தமிழக மக்கள் அறிந்திருப்பார்கள். பலர் அந்த ரயிலில் பயணமும் செய்திருப்பார்கள். கிட்டதட்ட சென்னை எழும்பூரில் பயணத்தை ஆரம்பித்தால் 7 மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிடும். குறிப்பாகத் திண்டுக்கல்லிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் மதுரையைச் சென்றடைந்துவிடும். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இதே அக்டோபர் மாதத்தின் குறிப்பிட்ட ஒருநாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் டூ மதுரையை மட்டும் 9 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணித்துக் கடந்தது என்றால் யாராவது நம்ப முடியுமா? பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பாசஞ்சர் ரயிலாக ஏன் மாறியது? 66 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 500 நிமிடங்களுக்கு மேல் ஏன் தேவைப்பட்டது? யார் காரணம்? தொழில்நுட்ப பிரச்சனையா? தொலைத்தொடர்பு பிரச்சனையா? என்றால் இது எதுவும் இல்லை. 

 

ஒரு குறிப்பிட்ட மனிதரைக் காண, அவர் வரும் பாதையில் கூடிய  கூட்ட நெரிசலால் ஏற்பட்ட  சிக்னல் குறைபாடே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குழந்தை மாதிரி தள்ளாடித் தள்ளாடி வரவைத்தது. யார் அந்த நபர்? அரசியல்வாதியா? ஆன்மீகவாதியா? சினிமா நடிகரா? என்று யாரேனும் யோசித்தால் அவர் நடிகர், ஆன்மீகவாதி, தமிழக அரசியலை புரட்டிப் போட்ட அரசியல்வாதி என இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர். அவர் பெயர் என்னவோ மூன்றெழுத்து. அதிமுக என்ற பேரியக்கத்தின் தலையெழுத்து. ஆம், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை நடைப்பயணமாக கூட்டிக்கொண்டு வந்த அவர் வேறு யாருமல்ல சாட்சாத் எம்.ஜி.ஆர் தான். ரசிகர்களின் திடீர் எழுச்சி ஏன்? என்ன காரணம்?

 

கலைஞரோடு இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். " என் இருபது ஆண்டுகால இனிய நண்பரை வருத்தத்தோடு நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் " என்ற அறிக்கையோடு கலைஞர் எம்ஜிஆரை நீக்கியிருந்தார். இந்நிலையில் தன் நலவிரும்பிகளோடு ஆலோசனை செய்த எம்ஜிஆர், தனிக்கட்சி துவங்க முடிவெடுத்த நிலையில், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அதற்கான துவக்க விழாவை நடத்தச் சென்னையிலிருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டார். சென்னையில் அலை அலையாகக் குவியத் தொடங்கிய ரசிகர்கள் திருச்சியைத் தாண்டியதும் பேரலையாகக் குவிந்தனர். 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாகத் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து மதுரை செல்ல முடியாமல் ரசிகர் கூட்டத்தில் சிக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பரிதாபமாக நின்றது.

 

ஒரு கட்டத்தில் ரயிலை விட்டு இறங்கி வாகனத்தில் மதுரை சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு எம்ஜிஆர் வர, ரயில்வே அதிகாரிகள் அவரிடம் நீங்கள் ரயிலை விட்டு இறங்கி விட்டீர்கள் என்று தெரிந்தால் ரயில் மதுரை சென்றடையும் என்ற உறுதிமொழியை கொடுக்க இயலாது. கோபத்தில் ரயிலை நொறுக்கிவிடுவார்கள். தயவுசெய்து தொடர்ந்து பயணியுங்கள் என்று எம்ஜிஆரிடம் கேட்டுக்கொண்டார்கள். இதனையடுத்து குழந்தை தள்ளாடி வருவது போல் 66 கிலோ மீட்டர் தூரத்தை ஏறக்குறைய பத்து மணி நேரம் பயணித்து மதுரையை வந்தடைந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில். இந்தியாவில் மிகக்குறைந்த தூரத்தை இவ்வளவு கால நேரம் எடுத்துக்கொண்டு ஒரு ரயில் பயணித்தது என்றால் அது இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தான் என்ற ஆச்சரிய பெருமையையும் அந்த ரயில் பெற்றுள்ளது.

 

 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.