Skip to main content

எம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று! தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...

Published on 19/05/2020 | Edited on 19/05/2020


 

mgr-jayalalalitha-chandraleka-ias-incident-1992-may-19


ரசு எந்திரத்தின் மிக முக்கிய ஆபரேட்டர், மாவட்ட ஆட்சியர். அரசாங்கம் எந்த ஒரு சட்டதிட்டத்தை அமல்படுத்த நினைத்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கட்டுப்படுத்துகிற, பாதுகாக்கிற மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல்வர்கள். அரசாங்கத்தோடு, அரசு அதிகாரிகள் இணங்கிப் போகவில்லை எனில் இடமாற்றம் இனாமாக அளிக்கப்படுவது, ஆதாம் ஏவாள் காலம் தொட்டு ஆதார் கார்டு காலம் வரை தொடரும் அதிகார மரபணுவின் விசேஷ குணம்.
 


19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில், இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என அந்நாளில் கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து வரும் இளைஞனைக் கவனிக்கிறார் அந்த அரசு அதிகாரி.


அப்போது திடீரென அவர் அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான். அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் எப்படிச் சொல்லிவிட முடியும்?. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் என்ற அடையாளத்திற்குரிய அவரின் முகத்தை அந்தச் சம்பவம் சிதைக்கப் பார்த்தது. தமிழகத்தின் முதல் பெண் ஆட்சியர் மீதுதான், தமிழகத்தில் முதல் ஆசிட் வீச்சு நடந்தேறியது.

பெண் ஆட்சியர் சந்திரலேகா மீது வீசப்பட்ட ஆசிட் தமிழ்நாட்டையே கொதிநிலையில் நிறுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரை கடைசி வரை அன்றைய முதல்வர் ஜெயலிலதா வந்து பார்க்கவும் இல்லை நலம் விசாரிக்கவும் இல்லை. ஜெ’வோடு அதிகாரி கொண்ட கருத்து முரணுக்குத்தான் ஆசிட் பதிலாக வந்துள்ளது எனப் பலநூறு செய்திகள் அன்று பேசிக்கொள்ளப்பட்டது. 

தாக்குதலுக்குப் பிறகான சந்திரலேகாவின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்டு சமூகத்தின் கண்களுக்கு இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைக் கொண்டு சென்றதில் நம் ‘நக்கீரன்’ இதழுக்கு மிக முக்கியப் பங்குண்டு. அதோடு நில்லாமல் புலனாய்வு செய்து, ஆசிட் வீசியது வடநாட்டைச் சேர்ந்த ‘சுர்லா’ என்பவன் என ஆதாரத்தோடு நிறுவி அவனைப் பேட்டிகண்டும் வெளியிட்டது, நக்கீரன். அதற்குப் பிறகுதான் காவல்துறை அவனைக் கைது செய்தது. இந்த ஆசிட் வீச்சு ஜெ’வின் வேலைதான் என்று அடித்துச் சொல்கிறார் சந்தரலேகா. ஜெ’வோ அவர்மீது எனக்கு கோவம் இருந்தது உண்மைதான் ஆனால் இதை நான் செய்யவில்லை என மறுத்திருக்கிருகிறார்.
 

mgr-jayalalalitha-chandraleka-ias-incident-1992-may-19

 

இதற்குப் பின்னணியில் யார் இருந்தார்கள்? ஏன் செய்தார்கள்? எனும் கால் நூற்றாண்டுகாலக் கேள்விக்குப் பதில் தேட சில சம்பவங்களை டைம் டிராவல் செய்து கழுகுப்பார்வையில் பார்ப்போம்..
 


ஜெ’வின் முதல் ஆட்சி (1991-1996):

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் சிம்மாசனத்தில் ஏறினார். 1 ரூபாய் சம்பளம் பெறுகிறேன் என அறிவித்ததும், இன்று வரை பிரபலமாகப் பேசப்படும் ‘சொத்துக் குவிப்பு’ வழக்கிற்கான அச்சாரம் போடப்பட்டதும், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றதும், அந்தத் திருமண ஊர்வலத்திற்கு டி.ஜி.பி பாதுகாப்பு அளித்ததும், கும்பகோணம் மகாமகத்தில் ஜெ’வும் சசியும் குளிக்கச் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் பலியானதும், ‘தராசு’ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டதும் என ‘ப்ரேகிங் நியூஸ்’ இல்லாத காலத்திலயே மக்கள் பதட்டத்தோடு படபடத்த காலம் அது.

“ஜெயலலிதாவோடு அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளாதே!” சந்திரலேகாவை எச்சரித்த எம்.ஜி.ஆர்:

1971 இல் துணை ஆட்சியராக செங்கல்பட்டில் பணியைத் தொடங்கினார் சந்திரலேகா. சில வருடங்களுக்குப் பிறகு அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் மூலம் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஐ சந்திக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆர் ஆல் நேரடியாக அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்திற்குத் தமிழகத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக (1980 – இல்) நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்தின் முதல் பெண் கலெக்டர் அலுவலக வாசலில் எந்நேரமும் காத்திருக்கும் மக்கள் மனுவைக் கொடுப்பதை விட அவரைப் பார்ப்பதற்கு வருவதுதான் அந்நாளில் அதிகமாம். அதற்கு அவரது அழகும் காரணம் என அந்நாளில் சிலாகிக்கப்பட்டது.

 

mgr-jayalalalitha-chandraleka-ias-incident-1992-may-19


முதல்வர் எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் இருந்த சந்திரலேகாவிற்குத் தனது நீண்ட கால நண்பரான ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைத்தார் எம்.ஜி.ஆர். தானும் ஜெ’வும் இணக்கமாக இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் விரும்பியதாகப் பிற்காலத்தில் அளித்த தமிழ்த் தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரலேகா. மேலும் அந்தப் பேட்டியில், தன்னை அதிகம் ஜெ’வோடு பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம் என எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

ஜெ’வுக்கு ‘ஃப்ரெண்ட்  ரிக்வெஸ்ட்’ கொடுத்த சசிகலா, சிபாரிசு செய்த சந்திரலேகா:

சந்திரலேகா கடலூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்ட அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் மனைவியோடு வந்து சந்திரலேகாவிடம் அறிமுகம் செய்துகொண்டார். அதன்பிறகு, முதல்வர் ஜெ’வோடு நல்ல தொடர்பில் இருந்த சந்திரலேகாவைப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். அந்தச் செய்தித் தொடர்பாளர் பின்னாளில் நடராஜனாகவும், அவரது மனைவி சசிகலாவாகவும் அறியப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் முதல்வர் ஜெ’வைச் சந்திக்கச் சென்றார் சசிகலா. தன்னை கலெக்டர் சந்திரலேகா அனுப்பி வைத்ததாக அறிமுகப்படுத்திக் கொண்டவர், தான் வீடியோ கடை வைத்திருப்பதாகவும், உங்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதுவானாலும் தங்களை அழைக்குமாறும், தாங்கள் சிறந்த முறையில் வீடியோ கவரேஜ் செய்து தருவதாகவும் விசிட்டிங் கார்டை கொடுத்துக் கேட்டுச் சென்றார். அதன் பிறகு, ஒன்று சேர்ந்து ‘அடித்து’ ஆடிய ஜெ-சசியின் நட்புக் கூட்டணி, தங்களை நோக்கி வந்த அத்தனை பிரச்சனைகளையும் ஹெலிகாப்டர் ஷாட்டுகளாக வானத்தை நோக்கிப் பறக்கவிட்டனர், சில நேரங்களில் அம்பயர்களும் பறந்தனர்.
 

ஜெ- சந்திரலேகா மோதல்:

ஆட்சியாளருக்குப் பல்லக்குத் தூக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், பல்லுக்குள் சிக்கிக்கொண்ட கறித்துண்டாய் சில அதிகாரிகள் ஆட்சியாளரின் நிம்மதியைக் கலைப்பதும் உண்டு. ஜெ’ முதல்வராக (1991-1996) இருந்த போது, ‘டிட்கோ’ என அழைக்கப்படும் ‘தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழக’த்தின் சேர்மேனாகப் பதவிவகித்து வந்தார் சந்திரலேகா. அப்பொழுது ‘ஸ்பிக்’ நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வைத்திருந்தது தமிழக அரசு. இந்நிலையில், அந்தப் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பேச்சு எழுந்தது. அப்படி விற்பது அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவே அந்தப் பேச்சிற்கே இடமில்லை என உறுதியாகச் சொல்லிவிட்டார் ‘டிட்கோ’ சேர்மன் சந்திரலேகா.

இந்தச் செய்தி, ‘ஸ்பிக்’ பங்குகளை விற்பதற்குத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெ’வின் காதுகளுக்குச் செல்கிறது. சரி நான் அவரோடு பேசிக்கொள்கிறேன் என டிட்கோ சேர்மேன் சந்திரலேகாவை அழைத்துப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. இருவரும் பேச நிலைமை இன்னும் மோசமானது. தன் பேச்சை ஒரு அரசு அதிகாரி எதிர்த்துப் பேசுவதா என அதிகார மரபணு மூளைக்கு தந்தியடிக்க பணியிடமாற்றம் செய்யப்பட்டார் சந்திரலேகா. அவர்கள் ஒருவரை ஒருவர் அழகைப் பற்றி பேசிக்கொண்டதாகவும், அழகுதான் முக்கியமென்றால் இந்நேரம் முதல்வர் நாற்காலியில் நான் அமர்ந்திருப்பேன் எனச் சந்திரலேகா ஜெ’விடம் பேசியதாகவும் சில ஆதாரமற்ற தகவல்கள் இன்றும் உலவிக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் பயனாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு பதவி ஏற்கச் சென்ற போதுதான் எக்மோரில் சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது.
 

mgr-jayalalalitha-chandraleka-ias-incident-1992-may-19


ஆட்சியர் சந்திரலேகா - அரசியல்வாதி சந்திரலேகா:

1992 மே 19 – இல் நடைபெற்ற அந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுப்ரமணிய சாமியின் ‘ஜனதா கட்சியின்’ தமிழ் மாநிலப் பொறுப்பாளராகச் சில காலம் பதவி வகித்தார் சந்திரலேகா. அதன்பிறகு சென்னை மேயர் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கிறார் சந்திரலேகா.
 

http://onelink.to/nknapp


அதுவரை பெரிதாகக் கேள்விப்பட்டிராத ‘ஆசிட்’ வீச்சை மௌனமாக உள்வாங்கியது அன்றைய சமூகம். அதன் பின்விளைவுதான் இன்றுவரை பெண்களை ஆசிட் குடித்துக் கொண்டு இருக்கிறது. காமுகர்கள் பெண்களைப் பழிதீர்க்க ஆசிட் வீசினால், ரவுடிகளுக்கோ மிக எளிமையான வெப்பனாக ஆசிட் மாறிப்போனது. 
 

அன்று ஆசிட் வீசி சிதைக்கப்பட்ட சந்திரலேகாவின் முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரியாக்கப்பட்டது, ஆனால், மனித நேயத்தின் முகம்தான் நாளுக்கு நாள் கோரமாகிக் கொண்டே செல்கிறது.