Skip to main content

“இஸ்ரோவின் சாதனைக்கு உதவிய பஞ்சாங்கம்” - மாதவன் சொன்ன ரகசியம்!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

madhavan said panjangam helped isro

 

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இந்த படம் இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாதவன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், " உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும்  விஞ்ஞான சாஸ்திரம், வானியல், ஆரியப்பட்டா, நட்சத்திரம், கோள்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் அந்த காலத்திலே  கணித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் அதுக்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த மாதவன், "கண்டிப்பாகத் தொடர்பு இருக்கு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33வது  முறைதான் செவ்வாய்க்கு  செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது, அவர்களது ராக்கெட் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும். இருந்தாலும் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. இதற்காக பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் திட்டம்; விண்வெளி வீரராகத் தமிழர் தேர்வு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
gaganyan Project Tamil chosen as an astronaut

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு இதுவரையில் மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

gaganyan Project Tamil chosen as an astronaut

இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப் படையில் பணியில் இணைந்தார். இந்திய விமானப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய விமானப் படையின் புதிய போர் விமானங்களின் டெஸ்டிங் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.