Skip to main content

சாதனை ஒன்றை வசமாக்க இருக்கும் அஸ்வின் மற்றும் விராட்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Ashwin and Virat to achieve a record

 

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி இன்று தொடங்கியது. 

 

இந்நிலையில் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் புதிய சாதனையை படைக்க உள்ளனர். 34 வயதான விராட் கோலி இதுவரை இந்திய மண்ணில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3958 ரன்களை எடுத்த விராட் 59.43 சராசரியில் ஆடி வருகிறார். இதுவரை 13 சதங்களையும் 12 அரை சதங்களையும் அடித்த இவர் அதிகபட்சமாக 254 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடாத விராட் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் 111 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்துள்ளார். என்றாலும் கூட விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அவர் இன்னும் 42 ரன்களை மட்டும் எடுத்தால் 4000 ரன்களை எடுத்த 5 ஆவது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இதுவரை சச்சின், ராகுல் ட்ராவிட், சேவாக், கவாஸ்கர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

 

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்துவீச்சாளராக உள்ள அஸ்வின் இதுவரை ஆஸி அணிக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டியில் விளையாடி 108 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 விக்கெட்களை மட்டும் எடுத்தால் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் கும்ளேவின் சாதனையை சமன் செய்வார். கும்ப்ளே ஆஸி அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகள் ஆடி 111 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஸ்வின் இன்னும் 10 விக்கெட்களை கைப்பற்றினால் சர்வதேச அளவில் 700 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


 

Next Story

பவுலர்களைக் காப்பாற்றுங்கள்; கதறிய பந்து வீச்சாளர்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

Save the bowlers; famous spinner reacts

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 261 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட நேற்றைய ஆட்டம் ஒரு பேட்டிங் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. ஆனால் பந்து வீச்சாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபாகரமாக அமைந்தது. தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் நேற்றைய போட்டி பற்றி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன், சால்ட் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. 

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 108 என மிரட்ட, சஷாங்க் சிங் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 

இப்படி அதிக ஸ்கோர்கள் தொடர்ந்து அடிக்கப்படுவதும், அவை எளிதில் சேஸ் செய்யப்படுவதும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் விளையாட்டாக மாறி வருகிறதென்றும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்படும் பிட்சுகள் இப்போதைய கொண்டாட்டத்துக்கு வேண்டுமானால் உதவுமென்றும், இது இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல உதவாது என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவரே அதுபற்றி வாய் திறந்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Save the bowlers; famous spinner reacts

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரருமான அஸ்வின் தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸ்-ல் “தயவுசெய்து யாராவது பந்து வீச்சாளர்களைக் காப்பாற்றுங்கள் “ என்றும், “ 260+ சேசிங்கில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலை. இது மூழ்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.