Skip to main content

சுயமுன்னேற்றத்தில் உங்களின் பங்கு என்ன? - மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம் 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

What is your role in self-improvement? - Explained by Psychiatrist Poorna Chandrika

 

சுய முன்னேற்றம் குறித்தும் தவறுகளை திருத்தி தன்னை வெற்றியை நோக்கி முன்னேறுபவராக மாற்றிக் கொள்வது பற்றியும் மனநல சிறப்பு மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம் அளிக்கிறார்.

 

சுய முன்னேற்றம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு தலைப்பு. அனைத்து வகைகளிலும் இப்போது இருப்பதை விட இன்னும் பெட்டராக மாறுவது எப்படி என்பதே அது. தேடல் என்பது எப்போதும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். ஒருமுறை மேடைப்பேச்சு முடிந்த பிறகு என்னுடைய பேராசிரியரிடம் சென்று "நான் நன்றாகப் பேசினேனா?" என்று கேட்டேன். "நன்றாகப் பேசினாய்" என்று கூறிய அவர், அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வீட்டின் கண்ணாடி முன் நின்று பார்க்கச் சொன்னார். மற்றவர்கள் என்ன சொன்னாலும், நமக்குள் கேட்கும் குரல் என்பது மிகவும் வலிமையானது. 

 

நாம் படிக்கும் புத்தகங்கள், நாம் காணும் மனிதர்கள், நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நமக்குப் பிடித்த விஷயங்களை அறிந்துகொள்வதற்கான ஆர்வம் என்பது ஒவ்வொரு நிமிடமும் நமக்கு இருந்துகொண்டே இருக்க வேண்டும். மகாபாரதத்தில் தர்மர் தான் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் உடையவராக இருந்தார். ஆர்வம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தாகம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும். 

 

ஒரு மேடைப்பேச்சை நாம் சரியாகப் பேசவில்லை என்றால் அது ஒரு சிறிய தோல்வி தான். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு ஏன் பாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை என்று ஒருகாலத்தில் சித் ஸ்ரீராம் யோசித்தாராம். அதன் பிறகு 3 வருடங்கள் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு அவர் சாதித்தார். இதை ஒரு பேட்டியில் அவரே கூறினார். நம்முடைய செயல்திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தேக்கம் என்பது இருக்கக்கூடாது. 

 

நம்பிக்கையை எப்போதும் இழந்துவிடக்கூடாது. தோல்வி என்பதை வெற்றிக்கான முதல் படியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்கிற புரிதல் நமக்கு வேண்டும். தனிமையில் நிச்சயம் இனிமை காண முடியும். இப்போது பலரும் தங்களின் மொபைலுடன் தான் தனிமையில் இனிமை காண்கிறார்கள். நமக்கான நேரத்தை எப்போதுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தனிமையையும் நாம் என்ஜாய் செய்ய வேண்டும். டிராவல் செய்வதில் கூட சிலருக்கு தனியாக டிராவல் செய்வது மிகவும் பிடிக்கும். தனிமை பல நேரங்களில் நமக்கு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும்.