Skip to main content

பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு; ரூ.692 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Ordered Trump to pay Rs. 692 crore compensation on A lawsuit filed by a female write

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இதனிடையே, பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் என்பவர், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதில், கடந்த 1990ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிகவளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வந்தார். 

அதன் பின்னர், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜீரோ கரோல், டிரம்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தனக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (27-01-24) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 83.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.692 கோடி) வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினால், டிரம்புக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்