Skip to main content

“இந்தப் போரில் நிச்சயம் வெல்வோம்” - மக்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Israel Pm released video to about war

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. 

 

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்து, போர் சூழல் உருவாகியுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக காசாவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு உடனே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்,  “இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த போரில் நாம் வெற்றியைப் பெற முடியாது. இந்த போரில் நாம் தான் வெல்வோம். இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் நிச்சயம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். இந்த தாக்குதலுக்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு ஹமாஸ் படைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும்.” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்