Skip to main content

சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இறுதிப்போட்டியில் இந்தியா VS நியூசிலாந்து அணிகள் மோதல்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

Champions Trophy Series: India VS New Zealand  final MATCH

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடின. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் நேற்று (04.03.2025) மோதியது.

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று (05.03.2025) லாகூரில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவிந்தரா 101 பந்துகளில் 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 94 பந்துகளில் 102 ரன்களும், கிளின் பிலிப்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 49  ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லுங்கி ந்கிடி 3 விக்கெட்களும், ககிசோ ரபடா 2 விக்கெட்களும், வியன் மல்டர் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு நியூசிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த கடின இலக்கை  எதிர்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 100 ரன்களும், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 66 பந்துகளில் 69 ரன்களும், டெம்பா பவுமா 71 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா  அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 108 ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்தராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Champions Trophy Series: India VS New Zealand  final MATCH

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் வரும் 9ஆம் தேதி மோத உள்ளது. இந்த போட்டி துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்