




தமிழ்நாட்டில் கலாச்சார திருவிழாக்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குத் தமிழக கிராமங்களில் ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம், கறி விருந்து தான். இந்த திருவிழாக்களின் தொடக்கமாகப் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லனைக் கால்வாய் மேல் கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 2 வாரம் முன்பு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்துச் சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியைத் தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் கடந்த வாரம் ஊர்வலமாகத் தூக்கிச் சென்று மண்ணடித் திடலைச் சுற்று ஒன்று சேர்ந்து கல்லனைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். இந்த திருவிழாவின் முக்கிய திருவிழாவே மது எடுப்புத் திருவிழா தான். மேற்பனைக்காடு கிராமத்தினர் தங்கள் உறவுகளை எல்லாம் அழைத்துக் கறி விருந்து உபசரிப்பு செய்வர்.
அதன் பிறகு மாலையில் தங்கள் வீடுகளில் குடங்களில் நெல் மணிகளை நிரப்பி அதில் பச்சை தென்னம்பாளைகளை உடைத்து வைத்து பூ சுற்றி அலங்காரம் செய்வர். அதனைக் குடியிருப்பு வாரியாக ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்துடன் மண்ணடித் திடலில் ஊரே ஒன்றாய் சேர்ந்து திடலை ஒரு சுற்று சுற்றி கல்லனைக் கால்வாயின் கீழ் கரையில் ஊர்வலமாகச் சென்று கால்வாய் கரையின் மேல் கரையோரம் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலைச் சுற்றி வந்து பாளைகளைக் குளக்கரையில் போட்டுவிட்டு நெல்மணிகளைக் குவியலாய் கொட்டிய பிறகு அம்மனை வழிபட்டுச் சென்றனர். பாளை எடுப்பில் பக்தர்களின் கும்மியாட்டம், அருளாட்டங்களும் ஏராளம். களைக்கட்டிய இந்த பாளை எடுப்பு திருவிழா கொண்டாட்டத்தில் பல கிராம மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.