Skip to main content

வங்கதேசத்தில் மீண்டும் பரபரப்பு; அதிபர் பதவி நீக்கம்?

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
Impeachment of the president? Resurgence in Bangladesh

வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து நவம்பர் 18 ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முன், தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என வங்கதேச அதிகர் முகமது ஷஹாபுதீன், கடந்த வாரம் அளித்த பேட்டில் ஒன்றில் கூறியது வங்கதேசம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், “ஆகஸ்ட் 5 ஆம் தேதியின் போதே ஹசீனாவின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாகவும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அதிபரே தனது உரையில் குறிப்பிட்டார். இது அவரது சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகும்” என்று தெரிவித்தார். 

Impeachment of the president? Resurgence in Bangladesh

அதிபர் கூறிய இந்த கருத்தால் கொந்தளித்த மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் (22-10-24) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், முகமது ஷஹாபுதீன் இருக்கும் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், அங்கு விரைந்த ராணுவத்தினர், போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மீது துப்பாக்கிச்சூட்டில் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர், பெரும் போராட்டத்துக்கு பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இருப்பினும், முகமது ஷஹாபுதீன் அதிபர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் செய்தியாளர் செயலாளர் ஷபிகுல் கூறுகையில், ‘அதிபரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் வைக்கும் கோரிக்கை தொடர்பாக, இடைக்கால அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் நாங்கள் தெரிவிப்போம்’ என்று கூறினார். மாணவர் அமைப்பினர், நடத்தும் போராட்டத்தை தடுக்க அதிபர் மாளிகையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்