![The youth ate the cake at the shop to realize that it was wasted; Hospital permission](http://image.nakkheeran.in/cdn/farfuture/ek2RcCsSltpDiDdzFIMKUcpWSajsS377vlFJ_ET9n28/1676974411/sites/default/files/inline-images/225_8.jpg)
உறவினரின் பிறந்தநாளுக்காக வாங்கிய கேக் கெட்டுப்போயுள்ளது என்பதை கடைக்காரருக்கு உணர்த்த, கடைக்காரர் முன்பே அதைச் சாப்பிட்டு மயங்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த இரு இளைஞர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஏகனாபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் சக்திவேல் மற்றும் ராஜேஷ். இவர்கள் இருவரும் தங்களது உறவினரின் பிறந்தநாளுக்காக கருப்புபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் கேக் வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அந்த கேக்கை வெட்டும் பொழுது அது கெட்டுப் போய் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் மீண்டும் பேக்கரிக்கு வந்து கடையில் இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர். இளைஞர்கள் கூறுவதை ஒப்புக்கொள்ள கடைக்காரர் மறுத்ததால் இளைஞர்களுக்கும் கடைக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகமானதால் கடைக்காரருக்கு கேக் கெட்டுப்போயுள்ளதை நிரூபிக்க இளைஞர்களே அந்த கேக்கை சாப்பிட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.