Skip to main content

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்! - ராமதாஸ்

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

We need to control the drug addiction in Tamil Nadu! - Ramadoos

 

தமிழ்நாட்டில் போதை வஸ்துக்கள் அதிகமாகிவருவதாகவும், அதற்கு இளைஞர்கள் அடிமையாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அதனால், போதை வஸ்துக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக்கொள்ளும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகின்றன. இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

கோவை உக்கடம் பகுதி, அண்மைக்காலமாகவே போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரைகளைப் பொடியாக்கி, அதைக் காய்ச்சி, வடிகட்டப்பட்ட நீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கின்றனர். அவர்களில் சிறுவர்களும் இருப்பதாக தெரிகிறது.

 

கோவையில் மட்டும்தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன என்றோ, மாத்திரைகளைப் பொடியாக்கி மட்டுமே போதை மருந்தாக பயன்படுத்துகின்றனர் என்றோ கூறிவிட முடியாது. அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகிறது. என்னென்ன போதை மருந்துகள் கிடைக்கின்றனவோ அவை அனைத்தையும் இளைஞர்களில் ஒரு பிரிவினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தானதாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பான்மையினரை காப்பாற்ற முடியாத நிலைமை விரைவில் உருவாகிவிடும்.

 

கோவையைவிட பல மடங்கு அதிகமாக போதை மருந்துகள் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ளன. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்.எஸ்.டி. என அனைத்து வகையான போதைப் பொருட்களும் சென்னையில் கிடைக்கின்றன. 24 மணி நேரம்வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களான அரிசியும், பருப்பும் வாங்குவதற்கு கூட சில இடங்களில் அரை கிலோ மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், போதைப் பொருட்கள் மிக மிக அருகிலேயே கிடைக்கின்றன. சில விடுதிகளுக்கும், அறைகளுக்கும் தொலைபேசியில் ஆர்டர் வாங்கி நேரடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு போதை பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களின் தொடர்பு வளையம் விரிவடைந்திருக்கிறது. இது தமிழகத்தின் நலன்களுக்கு நல்லதல்ல.

 

இதில் கவலையளிக்கும் உண்மை என்னவெனில் மீள முடியா போதை வழக்கத்திற்கு அடிமையாவோரில் பெரும்பான்மையினர் மாணவர்கள்தான். படிப்புக்காக வீடுகளை விட்டுவந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் மிகவும் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். வெளிமாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் பயின்றுவரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும்தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. இந்த உண்மை அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றாலும், இதையெல்லாம் தட்டிக்கேட்டால் மாணவர் சேர்க்கை குறைந்துவிடுமோ? என்ற அச்சத்தில் போதைத் தீமையை கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றன.

 

மது மற்றும் புகையிலையின் தீமைகளுக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக போராடிவருவதைப் போலவே போதைப்பழக்கத்திற்கு எதிராகவும் போராடிவருகிறேன். சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்களின் விற்பனை குறித்து ஆதாரங்களுடன் புகார் கூறி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறேன். சென்னையில் மதுவும், போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை பொதுக்கூட்டத்திலேயே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறோம். சென்னை - திருவல்லிக்கேணி  நெடுஞ்சாலையில் பெயர்பெற்ற பள்ளிக்கூடத்திற்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விற்கப்படும் போதைப் பொருட்களை வாங்கி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு சென்று காட்டி நடவடிக்கை மேற்கொள்ளச் செய்தோம்.

 

சென்னையில் இன்று காலை ரூ. 1 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை இன்னும் குறையவில்லை; அதிகரித்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது.

 

போதைப் பழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் உடல்நலம் சார்ந்த கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. போதை உச்சத்திற்கு செல்வதால் இழைக்கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன. இவை ஒருபுறம் இருக்க போதைக்கு அடிமையானவர்களால், அதை அனுபவிக்காமல் இருக்க முடியாது என்பதால், எப்படியாவது போதைப் பொருட்களை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக இளைஞர்களும், பல நேரங்களில் சிறுவர்களும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைக்காக நடைபெறும் மோதல்கள் பல நேரங்களில் கொலைகளில் முடிகின்றன. அந்த வகையில் போதை மருந்து பழக்கம் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாகவும் மாறிவருவதை அரசு உணர வேண்டும்.

 

இளைஞர்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம். அவர்கள்தான் விலைமதிப்பற்ற சொத்துகள். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.