
காணாமல் போனதாக எட்டு மாதங்களாக தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் 80 அடி கால்வாயில் சடலமாக உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் மாடன்பிள்ளைதர்மத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கயல்விழி கணவரை பிரிந்துள்ளார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த மாந்திரீக சாமியாரான சிவசாமியை கயல்விழி நாடியுள்ளார் .
கயல்விழியை கணவருடன் சேர்த்து வைப்பதாக சாமியார் சிவசாமி அதிக பணம் வாங்கி மாந்திரீக பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கயில்விழி கணவனோடு சேராததால் இது தொடர்பாக சிவசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு பூஜைக்காக தான் கொடுத்த பணத்தை அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுசீந்திரத்திற்கு கயல்விழியை வரச் சொன்ன சாமியார் சிவசாமி காரில் வைத்து அவரை கொலை செய்து அவருடைய கழுத்தில் இருந்த ஏழு சவரன் நகைகளை பறித்ததோடு சடலத்தை களக்காட்டில் உள்ள 80 அடி உயரக் கால்வாயில் வீசி உள்ளார்.
இதை அறிமால் கயல்விழி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட நிலையில் பழவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கயல்விழியின் செல்போன் சிக்னலை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கால்வாயில் இருந்து கயல்விழியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மாந்திரிக பூசாரி சிவசாமி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.