
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்ததில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே கீ மேன் வேலுச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள் இதனைக் கண்டு கடம்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் உடனே நிறுத்தப்பட்டுப் பார்த்ததில் 17வது பெட்டியில் இருந்து நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரிய வந்தது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுகோவில்பட்டி மற்றும் கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ரயில்வே எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் விரைவாக வந்து ரயில்வே டிராக்கில் உயர் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சரக்கு ரயில் பெட்டியில் ஏறித் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக கடந்து செல்லும் ரயில்கள் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி