
மதுரை அருகே பள்ளிக்குச் செல்லுமாறு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் விபரீத முடிவு மாணவிகளின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். ஒரு மாணவி 10 ஆம் வகுப்பும், மற்றொரு மாணவி 9 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார். வகுப்புகள் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் ஒரே கிராமம் என்பதால், நெருங்கிய தோழியாகவும் இருந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் பள்ளிக்குச் செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களது பெற்றோர்கள் படிப்புதான் எல்லாமே என்று கூறி இருவரையும் வற்புறுத்தி பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று வழக்கம்போல் இரு மாணவிகளும் பள்ளிக்குச் சென்ற நிலையில் செல்லும் வழியில் எறும்பு கொல்லி மருந்தை(விஷம்) வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். அதன்பிறகு வகுப்பறைக்குச் சென்ற இரு மாணவிகளும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த ஆசிரியர்கள் இரு மாணவிகளையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரு மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவிகள் விஷம் அருந்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.