
வீட்டில் இருந்து வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்ற இளைஞர்கள் ட்ரான்ஸ்பார்மரில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம், அலியா மரைக்காயர் தெரு மற்றும் வெங்காய கடைத்தெருவைச் சேர்ந்த ஆஷிக் ரகுமானும் அவரது நண்பர் இப்ராஹிமும் நேற்று இரவு நாகையில் இருந்து திருவாரூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சிக்கல் அச்சாமண்டபம் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த ட்ரான்ஸ்பார்மரில் அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆஷிக் ரகுமானும் அவரது நண்பர் இப்ராஹிமும் தூக்கி வீசப்பட்டதில் அவர்கள் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கீழ்வேளூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்து வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்ற இளைஞர்கள் இருவர் ட்ரான்ஸ்பார்மரில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.