Skip to main content

காதல் திருமணம்; மகளையும் மருமகனை கொன்ற கொடூர தந்தை! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் காதல் திருணம் செய்த தம்பதியரை 26வது நாளில் மகளையும் மருமகனையும் வெட்டிக் கொன்றிருக்கிறார் ஒரு கொடூரத் தந்தை. உறைந்து போய்க் கிடக்கிறது அந்தக் கிராமம்.

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகாலட்சுமி. இவர்களின் ஒரே மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். ரேஷ்மா, அவர் கிராமத்தைச் சேர்ந்த தன் உறவினரான மாணிக்கராஜ் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருக்கிறார். இவர்களின் காதலையறிந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். முத்துக்குட்டிக்கு, மாணிக்கராஜின் குடும்பத்தாருடன் ஏற்கனவே பகைமை இருந்திருக்கிறது. மேலும் தன் மகளுக்கு வேறு இடத்தில் வரன் தேடியிருக்கிறார் முத்துக்குட்டி.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

இதனிடையே கடந்த ஜூன் 26 அன்று ரேஷ்மாவுக்குப் பூப்புனித நீராட்டு நடந்திருக்கிறது. அதற்கு மறு நாள் ரேஷ்மாவும், மாணிக்கராஜும் தலைமறைவானார்கள். ஜூன் 29 அன்று திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வசித்திருக்கின்றனர். அதே சமயம் தன் மகளைக் காணவில்லை என முத்துக்குடி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இந்த நிலையில், காதல் தம்பதியர் ஊர் திரும்ப எண்ணிய நிலையில், நிலைமை சரியில்லை. இப்போதைக்கு திரும்ப வேண்டாம் என்று உறவினர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.

 

ஆனால், அதையும் மீறி காதல் தம்பதியர் கடந்த வாரம் ஊர் திரும்பியிருக்கிறார்கள். தன் தாயார் பேச்சியம்மாளுடன் மாணிக்கராஜ் தங்கியிருக்கிறார். இந்த தகவல் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்குப் போயிருக்கிறது. பேச்சியம்மாள் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்று வருகிறவர். 

 

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை முடிந்து மாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, மகனும் மருமகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியில் அவர் கதறி அழுதுள்ளார். இவரின் சத்தம் கேட்டு கிராமத்தவர்கள் அங்கு திரண்டனர்.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தகவலறிந்து சம்பவ இடம் வந்த எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெண்ணின் தந்தையான முத்துக்குட்டி அன்றைய தினம் மாணிக்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கட்டிலில் படுத்திருந்த மாணிக்கராஜை ஆத்திரத்துடன் வெட்ட முயன்றுள்ளார். அந்தச் சத்தம் கேட்ட மகள் ரேஷ்மா தந்தையைத் தடுத்திருக்கிறார். தடுக்க முயன்ற மகளை முதலில் சரமாரியாக வெட்டியவர், பிறகு மாணிக்கராஜை வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே காதல் தம்பதி இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது. தம்பதியரைப் பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கொன்று விட்டுத் தப்பியோடி இருக்கிறார். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளைப் போலீசார் முத்துக்குட்டியின் வீட்டில் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எட்டயபுரம் போலீசார் தப்பியோடிய முத்துக்குட்டியை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.