Skip to main content

“விஜயகாந்த் வீட்டில் பாதுகாத்து வந்த பொக்கிஷம்” - திருச்சி வேலுச்சாமி

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Trichy Veluchami shared about the photograph kept at Vijayakanth house

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயகாந்த் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டவை, “தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரரை போல என்னுடன் பழகிய அன்பு சகோதரர் விஜயகாந்த் மறைந்திருக்கிறார். அதிமுக எனும் தனிக் கட்சியை எம்.ஜி.ஆர் வைத்திருந்தாலும், நான் சாகும் வரை காமராஜர் தான் எனது தலைவர் என்று கூறியது போல், விஜயகாந்த்தும் தனியாக தேமுதிக என்ற தனி கட்சியை வைத்திருந்தாலும் நான் காமராஜரின் தொண்டன் தான் என்று சொல்லியதற்கு என்றும் தயங்கியது கிடையாது. 

கடைசி வரை கதர் வேஷ்டி சட்டை அணிவதில் பெருத்த மகிழ்ச்சி கொண்டவர் விஜயகாந்த் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவரது வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு புகைப்படம், பலருக்கு தெரியாது, விஜயகாந்திற்கு 5 அல்லது 6 வயது இருக்கும் போது காமராஜர் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது காமராஜருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது வீட்டில் பொக்கிஷமாக வைத்திருந்தார். அரசியல் களத்தில் இருந்தாலும், திரைத்துறையில் பல சாதனைகளை செய்தாலும் மனிதனாகவே வாழ்ந்தார். சக மனிதனை மதிக்கக் கூடிய பெரிய பண்பாளர். அவரது இழப்பு மிகவும் ஈடுசெய்யமுடியாத ஒன்று. நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சக மனிதனை மதிக்கக் கூடிய பண்பை விஜயகாந்த்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்