Skip to main content

திருநங்கையைக் கொன்ற இளைஞர் கைது! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

transgender passes away case karur police arrested  one

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சேர்ந்த திருநங்கை மணிமேகலை (28). இவர் கடந்த 15ம் தேதி அன்று, கொள்ளிடம் ஆற்றுக்கரை ஓரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து திருநங்கை சுகன்யா என்பவர் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாா், லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீஸார் மணிமேகலை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கைரேகையை மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் டி.எஸ்.பி. அஜய்தங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் விதுன்குமார், சுமதி உள்ளிட்ட போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே மறைந்திருந்த கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

 

ரமேஷிடம் போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கரூர் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் திருநங்கையான மணிமேகலை. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(25). ரமேஷ், கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருநங்கையான மணிமேகலையுடன் ரமேஷ்க்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். நாளடைவில் மணிமேகலை, ரமேஷ் இருவரும் காதலித்து பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில் மணிமேகலை, ரமேஷிடம் சேர்ந்து வாழுவோம் என ஆசை வார்த்தைக் கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். ரமேஷும் சேர்ந்து வாழுவோம் எனும் எண்ணத்தில் கொடுத்து, பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரமேஷ் மணிமேகலையின் செல்போனை பார்த்துள்ளார். அப்போது அவர், பல ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

 

அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தன்னிடம் வாங்கிய பணத்தை கொடு என மணிமேகலையிடம் ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்துள்ளார். தொடர்ந்து ரமேஷ், மணிமேகலையை பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் வேறொரு நம்பரில் இருந்து ரமேஷ், மணிமேகலையைத் தொடர்பு கொண்டு எனக்கு பணம் வேண்டாம் நாம் ஒன்றாக வாழ்வோம் எனக் கூறியுள்ளார். அதற்கு மணிமேகலை சம்மதம் தெரிவித்து, ‘நான் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளேன். அங்கே வாருங்கள்’ என அழைத்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு மணிமேகலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலத்தின் அருகே இருந்துள்ளார். அங்கு வந்த ரமேஷ், மணிமேகலையிடம் ஆசையாகப் பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். 

 

அப்போது ரமேஷ் தான் கொடுத்த பணத்தை எப்போது தருவாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு என்னால் பணம் தர முடியாது என மணிமேகலை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினார் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷ், திருச்சி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்