Skip to main content

ஓடும் பேருந்தை மடக்கி ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Three arrested for reversing bus

 

கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று (01.12.2021) சென்றுகொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அருகேயுள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், தனியார் பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநர் தேசிங்கை அவதூறாகப் பேசி கத்தியால் வெட்டினர். தடுக்கவந்த பேருந்து நடத்துனர் நவீன்குமாரையும் அவர்கள் வெட்டிவிட்டு, அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

 

Three arrested for reversing bus

 

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 

Three arrested for reversing bus

 

இந்நிலையில் நேற்று, தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் பிரித்வி (எ) பிரிதிவிராஜன் (22), கதிர்வேல் மகன் சீனிவாசன் (21), புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த வேம்பன் மகன் மருது (எ) மருதுநாயகம் (23) ஆகிய 3 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

 

Three arrested for reversing bus

 

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்கு அளித்த புகாரின் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரித்வி, மருது ஆகியோர் மீது கடலூர், புதுச்சேரி பகுதி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் தற்போது, இருசக்கர வாகனத்துக்கு வழிவிடாத காரணத்தால் ஓட்டுநர், நடத்துனரைத் தாக்கியதும் தெரியவந்தது.

 

இதனிடையே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விடுத்துள்ள எச்சரிக்கையில், 'கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள நபர்கள் புதுச்சேரி மாநில ரவுடிகளுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.