Skip to main content

கோடீஸ்வரர்களாக ஆகவேண்டும் என்ற ஆசையில் உடல் உறுப்புகளை கடத்திய 3  பேர்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Three aressted by theni police got shocking information in investigation

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் உத்தமபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, உத்தமபாளையம், பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, நெடு நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த காவல்துறையினர் கார் அருகில் சென்றனர். அப்போது அந்தக் காருக்குள் 3 மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.

 

அப்போது, அவர்கள் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது அந்த காருக்குள் 3 சூட்கேஸ்கள் இருந்தன. அதில் ஒரு சூட்கேஸை காவல்துறையினர் திறந்து பார்த்த போது, அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ப்ளாஸ்டிக் பைகளில் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், காரில் இருந்த மூவரையும் உத்தமபாளையம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் வந்த கார், அதில் இருந்த 2 சூட்கேஸ் பெட்டிகள் உள்பட உடல் உறுப்புகள் அடங்கிய பெட்டிகளையும் அங்கு எடுத்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், மற்ற 2 சூட்கேஸ் பெட்டிகளையும் திறந்து சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் துணிகளும், மற்றொரு பெட்டியில் எலுமிச்சை, கற்பூரம், முட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

 

அதன்பிறகு அந்த காரில் வந்த 3 பேரையும் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்தன. அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், காரில் பிடிபட்ட நபர்கள் மதுரை மாவட்டம்  அய்யனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (39), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), கமுதியை அடுத்த பசும்பொன் பகுதியைச் சேர்ந்த முருகன் (65) என்பது தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கும் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் (52) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மாந்திரீகம் செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரிடமும் நள்ளிரவில் மாந்திரீக பூஜை செய்தால் பணம் பல மடங்காகக் கொட்டும். ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய 3 பேரும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு என்ன பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.அதற்கு ஜேம்ஸ், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் நேரில் சென்று ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்போது அந்த நபர் 3  சூட்கேஸ் பெட்டிகளை தருவார். அந்த பெட்டிகளை வாங்கிய பின் அதனை திறந்து பார்க்காமல் கொண்டுவர வேண்டும் . பின்னர் அந்தப் பெட்டிகளை வைத்து பூஜை செய்தால் உங்களுக்கு பணம் பலமடங்காக பெருகும் என்று கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து ஜேம்ஸ் கூறியபடி, அலெக்ஸ் பாண்டியன், பிரதாப் சிங், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் கேரளா, வண்டிப்பெரியார் பகுதிக்கு சென்றுள்ளனர்.  அங்கு சென்றதும் ஜேம்ஸ் கூறிய நபரிடம் தாங்கள் வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதற்கு அந்த நபர் அவர்களிடம் 3 சூட்கேஸ் பெட்டிகளை கொடுத்துள்ளார். அந்த பெட்டிகளை வாங்கிய அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரும் காரில் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர். நேற்று முன் தினம் 3 பேரும் உத்தமபாளையத்துக்கு காரில் வந்தடைந்தனர். அப்போது அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நின்று, ஜேம்ஸை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் அந்தப் பெட்டிகளை காவல்துறையினர் சோதனை செய்யும் வரை அதில் என்ன இருந்தது என்பது தங்களுக்கு தெரியாது என்று பிடிபட்ட 3 பேரும் தெரிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, அந்த பெட்டியில் இருந்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகளா? அல்லது விலங்குகளின் உடல் உறுப்புகளா என்பதைக் கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அந்த உடல் உறுப்புகள் மனித உறுப்புகளாக இருந்தால் நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய தலைமறைவான ஜேம்ஸையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்தபோது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள உறுப்புகள் விலங்கின் உறுப்புகளா அல்லது மனித உறுப்புகளா எனக் கண்டறிய மதுரை தடயவியல் ஆய்வுக் கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அந்த சோதனையில், அவை மனித உறுப்புகள் எனத் தெரியவந்தால், அது ஆணினுடையதா அல்லது பெண் உறுப்புகளா என அடுத்து கண்டறிவோம். அதன் பிறகு வண்டிப்பெரியாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட உறுப்புகளும், காணாமல் போனவர்களின் மருத்துவ சான்றுகளையும் வைத்து ஆய்வு செய்து அந்தக் கோணத்தில் விசாரணை நடத்தப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வோம் என்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.