Skip to main content

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் என்னென்ன தகவல்கள் இடம்பெறலாம்..?

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

 

tamilnadu government finance statement

 

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று (21/06/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் உரையில் பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. 

 

குறிப்பாக, "தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழக நிதி நிலையின் தற்போதைய உண்மை நிலையை மக்களுக்கு வெள்ளை அறிக்கை விளக்கும். தமிழகத்தின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருக்கும் சூழலில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது" என்று அந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

வெள்ளை அறிக்கையில் என்னென்ன தகவல்கள் இடம்பெறும்?

 

குறிப்பிட்ட பிரச்சனை குறித்து முழுமையாக ஒளிவுமறைவின்றி உண்மை நிலையை வெளிப்படுத்தும் அரசின் ஆவணமே வெள்ளை அறிக்கை. இதில் புள்ளி விவரங்கள், பிரச்சனைக்கான விளக்கங்கள் இருக்கும். ஜூலை மாதம்  தமிழக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் கடன் சுமைக்கு என்ன காரணம் என விளக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததால் வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது சுட்டிக் காட்டப்படலாம். 

 

வருவாய் இன்றித் திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்த கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் ஏற்படும் செலவினம் குறித்தும், கடந்த 2011- ஆம் ஆண்டு ரூபாய் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை 2020- 2021 ஆம் நிதியாண்டில் ரூபாய் 5 லட்சம் கோடியாக அதிகரித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும்,  ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்திய பிறகு மதிப்புக் கூட்டு வரி மூலம் தமிழக அரசுக்கு நேரடியாகக் கிடைத்த வருவாயை இழந்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்ட நஷ்டம் குறித்தும் இதில் விளக்கப்படலாம். 

 

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கே அதிகம் விற்கப்படுவதால் நமக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாயும் மிகக்குறைவே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் நிதிக்குழுவும் தமிழகத்திற்கான வருவாய் பகிர்ந்தளிப்பு சதவீதத்தைக் குறைத்து வருகிறது. மதுக்கடைகள் வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 30,000 கோடியும், பெட்ரோல்- டீசல் விற்பனையால் ஆண்டுக்கு ரூபாய் 30,000 கோடியும் தமிழக அரசின் பிரதான வருமானமாக உள்ளது. இவையெல்லாம் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படலாம். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
The central government released the tax distribution to the states

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதி மொத்தம் ரூ. 1,42,122 கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ. 5,797 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த வரிப்பகிர்வில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 25,495 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் மாநிலத்திற்கு ரூ. 14,25 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 11,157 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 10,692 கோடி, ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ. 8,564 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிப்பகிர்வு நிதி மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.