Skip to main content

மருத்துவர்களின் அலட்சியம், செவிலியர்களின் ராஜ்ஜியம்; தொடரும் அவலம்...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் செலுத்திய ஊசி முறிந்து உள்ளே சென்றது. ஊசியை அகற்றி சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால் இரண்டு வாரங்களாக வேதனையடைந்தவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

 

sirkali woman affected by broken needle in hospital

 

 

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் பார்வதி,  கணவரை இழந்துள்ள அவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 9ம் தேதி பார்வதிக்கு காய்ச்சல் அடிக்க அருகில் உள்ள சீர்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவரோ செவிலியரிடம் கூறி பார்வதிக்கு இடுப்பு பகுதியில் ஊசி போடசொல்லியிருக்கிறார். ஊசிபோட்ட செவிலியர் ஊசியை எடுக்க முயன்றபோது வெளியே வராமல் உள்ளேயே முறிந்துவிட்டதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.  

பிறகு அந்த தவறில் இருந்து தப்பித்துக்கொள்ள அங்கிருந்த மருத்துவர் சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு பார்வதியை அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்து விட்டு ஊசி எதுவும் இல்லை என கூறி அனுப்பிவிட்டனர். வலியோடு வீட்டுக்கு வந்த பார்வதிக்கு நாள் ஆக ஆக ஊசி போட்ட இடத்தில் வலி கடுமையாகி துடித்துள்ளார். 

இந்தநிலையில் மூன்றுநாள் கழித்து பார்வதியின் வீட்டைதேடி அவசர அவசரமாக ஓடிவந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர், உங்க எக்ஸ்ரேவை  முழுமையாக ஆய்வு செய்தபோது ஊசி உள்ளே இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு நீங்க வரவேண்டும் என அழைத்துள்ளனர். வலியோடு அரசு மருத்துவமனைக்கு சென்ற பார்வதிக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் ஊசி ரொம்ப ஆழத்துக்குச் சென்றுவிட்டது,  அதனை இங்கு அகற்ற முடியாது என கூறி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போகசொல்லியிருக்கின்றனர். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பார்வதியம்மாளுக்கு வருமானம் இல்லை என வீட்டிலேயே முடங்கிவிட்டார், 

இந்த செய்தி, ஊடகங்கள் வழியாக வெளியுலகத்திற்கு பரவ, பிறகு சிதம்பரம் அழைத்துச்செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுத்துள்ளனர். மருத்துவர்களின் அலட்சியம், செவிலியர்களின் அஜாக்கிரதையால் இதுபோன்ற விபரீதம் நடந்தபடிதான் இருக்கிறது.

இதற்கு முன்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பெண் ஒருவருக்கு தலையில் சாக்கை தைப்பைதுபோல தைத்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்