
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாகவும் பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீ காந்திடம் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். பின்பு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதீப் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை கிராம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.12, 000-க்கு வாங்கி 40 முறைக்கு மேலாக அதை அவர் உபயோகப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மூலமாக கிட்டத்தட்ட ரூ.72,000 பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இவை அனைத்தும் உறுதிசெய்யப்பட்ட பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் வேறொரு நடிகருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஸ்ரீ காந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.