
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி- சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் முத்துக்குமார் - திருமணி தம்பதியினர். இவர்களது மகன் முத்துக்கிருஷ்ணன் பரமன்குறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் மாணவன் முத்துக்கிருஷ்ணன் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாணவர் முத்து கிருஷ்ணனின் சட்டைப்பையில் தனது சாவுக்கு பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி, மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய 4 பேர் தான் காரணம் என கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவன் முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினர் கூறுகையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாடிய முகத்துடன் காணப்பட்ட முத்துகிருஷ்ணன் ஆசிரியர்கள் தன்னை அடித்தாக தெரிவித்தான். பின்னர் சிறிது நேரம் வீட்டு பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான். இந்நிலையில் தான் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். பழங்குடியின காட்டு நாயக்கன் வகுப்பை சார்ந்த தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததாலும், சாதி சான்றிதழ் கொடுக்க அதிகாரிகள் அலைக்கழித்த நிலையில் பள்ளியில் சாதிச்சான்றிதழ் கேட்டு கொடுக்க முடியாததால் ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் எனவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் முத்து கிருஷ்ணன், தன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி