
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நாயகராக இருக்கும் அதர்வா பெரிய வெற்றிப்பெறும் முனைப்பில் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்று ரசிக்க வைத்தாலும் இன்னமும் பெரும் வெற்றியை ருசிக்காத நிலையில் அதனை அடையும் முயற்சியில் இந்த முறை ‘டி என் ஏ’ படம் மூலம் களத்தில் குதித்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு கை கொடுத்ததா, இல்லையா?
காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போதை ஆசாமியாக பொறுப்பற்ற இளைஞராக இருக்கும் அதர்வாவுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சற்றே மனநோய் இருக்கும் நிமிஷா சஜயனுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சி கிடைத்து இருவரும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்கின்றனர். அதற்கு பரிசாக அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த ஆண் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே திருடு போகிறது. மர்மமான முறையில் காணாமல் போகும் அந்த குழந்தையை அதர்வா கண்டுபிடித்தாரா, இல்லையா? இந்த குழந்தை கடத்தலுக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

படம் ஆரம்பித்து முதல் 40 நிமிடங்கள் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. அதை அப்படியே கடந்து விட்டு அதர்வா திருமணம் செய்து குழந்தை பெற்ற பிறகு பார்த்தால், அங்கிருந்துதான் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் வேகம் எடுக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்து பரபரபரவென ஜெட் வேகத்தில் பயணித்து இறுதி கட்ட காட்சிகளில் கலங்கடிக்கும் படியான அழுத்தமான காட்சிகளால் ரசிகர்களிடையே கைத்தட்டல் பெற்று ஒரு சிறப்பான குடும்ப படமாக அமைந்திருக்கிறது.
குழந்தை கடத்தல் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் அதை திருடும் நபர்கள் அவர்களுக்குள் இருக்கும் லிங்குகள் என சமகால பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அதை நேர்த்தியான திரைக்கதையால் சென்டிமென்ட் ஆன காட்சிகள் மூலம் கொடுத்து குடும்ப ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகர்களையும் கவரும்படி கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பெண் என்னதான் பல்வேறு விதமான மனப்பிறழ்வுடன் இருந்தாலும் தன் குழந்தை என்று வரும் பொழுது அவர் எந்த அளவு தெளிவுடன் நடந்து கொள்கிறார் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக காண்பித்து அதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து படத்தையும் கரை சேர்த்து வெற்றி பெற செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா கேரியரில் இது ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது.

அதர்வா வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் நிமிஷா சஜயனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. முதிர்ச்சியான கணவனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். நாயகி நிமிஷா சஜயன் பாத்திரம் அறிந்து நடித்து கவர்ந்திருக்கிறார். இவரது எதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்துடன் ஒன்றி பார்ப்பவர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் கவர்ந்திருக்கிறார்.
போலீஸாக வரும் பாலாஜி சக்திவேல் படம் முழுக்க அதர்வாவுடன் பயணித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் படத்தில் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், விஜி சந்திரசேகர், செல்வராஜ் மற்றும் ரமேஷ் திலக் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு செய்திருக்கின்றனர். பார்த்திபன் ஒளிப்பதிவில் குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜிப்ராண் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.
.

குழந்தை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு கதையாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாகவும் பிரஷ் ஆகவும் அமைந்தது படத்திற்கு பிளஸ் ஆக மாறியிருக்கிறது. அதேபோல் தாய் பாசத்தை மையப்படுத்தி அதை சிறப்பாக காட்சிப்படுத்தி, பார்ப்பவர்களுக்கும் மனதுக்குள் நெருக்கம் ஏற்படும்படியான உணர்வை கொடுத்து குறிப்பாக பெண்கள் ரசிகர்களை கவர்ந்திருப்பதும் படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. முதல் 40 நிமிட காட்சிகளை மட்டும் தவிர்த்து இருந்தால் இந்த படம் இன்னமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும்.
டி என் ஏ - பாசப் போராட்டம்!