Skip to main content

அரசியல் நாகரீகம் தெரியாத துரோகிகள்: மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்: அதிமுகவை சாடிய திவாகரன்

Published on 21/03/2018 | Edited on 21/03/2018


 

divakaran


"நடராஜனின் இறப்பு எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு, அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் எல்லோரும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர், பலர் அரசியல் நாகரீகம் தெரியாமல் இருக்கின்றனர்" என்றனர் திவாகரன்.
 

தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பதினைந்து நாள் பரோலில் வந்த சசிகலாவை பார்த்து கண்கலங்கினார். பிறகு நடராஜனின் உடலுக்கு மலர்வளையம் வைத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 

அவர் கூறுகையில், நடராஜனின் உடல் அவர் விருப்பபடியே திராவிட சுயமரியாதைபடி அவரது உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படும். முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்பணித்தவர். அரசியல் துரோகிகள் எங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்து வந்தாலும் அதை உறவினர்கள், நண்பர்களின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறோம்.
 

அதிமுகவில் பிரச்சனை உருவானபோதில் இருந்தே நடராஜன் மனதளவில் பாதிக்கப்பட்டு, உடல் நலம் குன்றிப்போனார். எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு அதிமுகவை மீட்க நடராஜன் செய்த தியாகம் அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
 

எனது சகோதரியை கரம்பிடிக்கும்போது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். இந்தி எதிர்ப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது குண்டுபட்டு இறந்தார், அடுத்த குண்டு நடராஜன் மீது படவேண்டியது மயிரிழையில் தப்பித்தார். 
 

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு கலைஞரால் வளர்க்கப்பட்டவர் நடராஜன், இவருக்காகவே மக்கள் தொடர்புத்துறையை உருவாக்கிக்கொடுத்தனர். எந்த பதவி மீதும் ஆசைப்படாதவராக கிங் மேக்கராகவே இருந்துவிட்டார்.
 

சசிகலாவுக்கு மூன்று கண்டிசனோடு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது, அதில் தஞ்சையை விட்டுபோகக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என கூறியுள்ளனர். துக்கத்தில் உள்ளவரால் அரசியல் பேசமுடியுமா என்பது கூட தெரியாமல் பரோல் வழங்குறார்கள். அதோடு பரோல் வழங்கி வந்த நாளும், போகிற நாளும் கணக்கிடக்கூடாது ஆனால் அதையும் சேர்த்தே பதினைந்து நாள் பரோல் வழங்கியிருக்கிறார்கள்.
 

நடராஜனால் 75 பேர் அமைச்சராகியுள்ளனர், அவர்களுக்கு நன்றியோ, அரசியல் நாகரீகமோ கிடையாது, அரசியல் வேறு, துக்கம் வேறு என்பது கூட தெரியாதவர்களாக இருந்துகொண்டு பல இன்னல்களை எங்களுக்கு கொடுக்கின்றனர், என்ன துரோகம் செய்தாலும் நாங்கள் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்