Skip to main content

ஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை! கீழக்கரை கும்பல் சிக்கியது!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

salem police station incident rowdies arrest the police

 

 

சேலத்தில், காவல்நிலையம் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொன்ற சம்பவம் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் தேதி கோபிநாத், அவருடைய நண்பர் தேவகுமார் (24) மற்றும் கூட்டாளிகள் உள்ளிட்ட சிலர், அதே பகுதியைச் சேர்ந்த எடிசன் (23) என்பவரை கீழக்கரையில் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிநாத், தேவகுமார் ஆகியோரை கைது செய்துதனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், நவ. 5- ஆம் தேதி அவர்கள் இருவரும் நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். கோபிநாத்தும், தேவகுமாரும் சேலம் சூரமங்கம் காவல்நிலையத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் இருவரும் சூரமங்கலம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

 

நவ. 24- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு கோபிநாத்தும், தேவகுமாரும் சூரமங்கலம் காவல்நிலையத்தில் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தி, வீச்சரிவாளுடன் தூக்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் கொல்ல ஓடிவந்தனர். இதைப்பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். 

 

இந்த துரத்தலில் கோபிநாத்தை மர்ம நபர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அவர்கள் சரமாரியாக வெட்டியதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் கூட்டம் கூடியதைப் பார்த்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. கண் முன்னாலேயே தன் கூட்டாளி கொல்லப்பட்டதைப் பார்த்த தேவகுமார், சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தப்பிச்சென்று நடந்த விவரங்களைக் கூறினார். 

 

இதையடுத்து, காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன், உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பிய கும்பலை பிடிக்க ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் முடுக்கி விடப்பட்டனர். பள்ளப்பட்டி காவல்துறையினர், புதிய பேருந்து நிலையத்தில் கொலையாளிகள் ஏதும் பேருந்தில் ஏறி தப்பிச் செல்கிறார்களா என கண்காணித்தனர். 

 

ஒரு பேருந்தில் மூன்று பேர், உடைகளில் ரத்த கறையுடன் இருந்ததை பார்த்த காவல்துறையினர், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அந்தோணி, கார்த்திக், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. எடிசனை கொலை செய்த கோபிநாத், தேவகுமாரை பழிக்குப்பழியாக சேலத்தில் வைத்து தீர்த்துக் கட்டிவிட்டு பேருந்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

எப்போதும் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக இருக்கும் சூரமங்கலம் சாலையில், காவல்நிலையம் அருகிலேயே ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.