சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தை அடுத்த இரும்பாலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பாலிகுளத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரிய வந்தது. பாலகிருஷ்ணன், பிழைப்புத்தேடி சேலம் வந்திருந்தபோது, இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே சென்ற பாலகிருஷ்ணன், கடந்த எட்டு வருடங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இரும்பாலை காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். அவரை கடந்த 3.7.2019ம் தேதி கைது செய்தனர். எட்டு ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் போக்குக் காட்டி வந்த குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.