Skip to main content

கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

தேனி மாவட்டம், கம்பத்தில் கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பஸ்ஸில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

      தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் ஜெய மங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமலை இரண்டில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல மேலாளருக்கு கடிதம் ஒன்றை  அனுப்பினார். அதில் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அதிகமாக வேகத்தடை வேக தடுப்பு கம்பிகள் இருப்பதாகவும் வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஒதுக்கிய நேரத்தில் சென்று வர முடியவில்லை. மேலும், எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி செய்வதால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் இல்லையென்றால் கம்பத்திலிருந்து செம்பட்டி வரைதான் பஸ்சை இயக்குவேன் என்று கூறியிருந்தார். 

 

Bus Driver

இதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 26ஆம் தேதி கம்பத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாலகிருஷ்ணன் பஸ்சை ஓட்டி சென்றவர், செம்பட்டி வரை சென்றுவிட்டு மீண்டும் கம்பத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரி, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை அவரிடம் கம்பம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாண்டியராஜன் வழங்கவில்லை.

       இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பாலகிருஷ்ணன் பணிக்கு வந்தார். பணிமலைகள் இருந்து பஸ்சை அவர் எடுக்க முயன்றார். உடனே அங்கு வந்த கிளை மேலாளர் பஸ்சை இயக்க கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்ஸில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு  இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.


 

இதையடுத்து பணிமனையில் நுழைவாயிலை மூடச்சொல்லி கிளை மேலாளர் உத்தரவிட்டார். இதன் காரணமாக பணிமனையில் இருந்து மற்ற பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக  கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்   பொன்னிவளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பாலகிருஷ்ணன் பஸ்ஸை விட்டு இறங்க கூறினர். ஆனால் பஸ்சை விட்டு அவர் இறங்க மறுத்தார். 



இதையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கீழே இறக்கினார்கள். பின்னர் டிரைவர் பாலகிருஷ்ணனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களுடைய பிரச்சனைக்கு அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் போல பொன்னிவளவன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கு அறிவுரை கூறினார். அதன் பின்பு தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் பணி மலையில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சார்ந்த செய்திகள்