Skip to main content

வெள்ளாமையை அழிக்கும் வெள்ளாடுகள் வேண்டாம்... கிராம கட்டுப்பாடு!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

pudukkottai district village peoples goats


கிராமத்தில் உள்ள மரங்களை, வெள்ளாமையைத் தின்று அழிக்கும் வெள்ளாடுகள் வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் முனசந்தை கிராமம், சுமார் 500 குடும்பங்கள் வாழும் முழு விவசாய கிராமம். கிணற்றுப் பாசனத்தில் நெல், காய்கறிகள் விவசாயம் நிறைந்த அழகிய பசுமையான கிராமம். இந்தக் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை வீட்டுக்கு வீடு வளர்த்த வெள்ளாடுகளால் பயிர்கள், மரக்கன்றுகள் அழிக்கப்படுவதாக ஊர் கூடி எடுத்த முடிவுதான் வெள்ளாடுகள் வேண்டாம் என்பது. கிராமங்களில் தங்கள் வருமானத்திற்காக வீட்டுக்கு 2 ஆடுகளையாவது வளர்ப்பது வழக்கம் என்றாலும், பயிர் பச்சைகளை மேய்ந்துவிடுவதால் வெள்ளாடுகள் வளர்ப்பதை நிறுத்திக்கொண்டு, பால் மாடுகள் வளர்க்கத் தொடங்கியதால் தற்போது விவசாயம் செழித்து வளர்கிறது.

 

இதுகுறித்து முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரரும், உழவர் மன்ற அமைப்பாளருமான வேலாயுதம் கூறும்போது, "எங்க ஊர்ல வீட்டுக்கு வீடு வெள்ளாடுகள் வளர்ப்போம். நான் சர்வீஸ் முடிந்து ஊருக்கு வந்து வேறு வேலைக்குப் போக வேண்டாம், இயற்கை விவசாயம் செய்வோம். பாரம்பரிய நெல் நடுவோம் என்று முடிவெடுத்தேன். கிணறு வெட்டி விவசாயம் தொடங்கித் தொடர்ந்து ஊரெல்லாம் மரக்கன்று பட்டு வளர்க்க உள்ளூர் பிரமுகர்கள், இளைஞர்களை அழைத்தபோது முன்வந்தார்கள்.

 

கிராமத்தில் எல்லையிலிருந்து சாலை ஓரம் தொடங்கி கல்லறை தோட்டம்வரை மரக்கன்றுகளை நட்டு வளரும்போது வெள்ளாடுகள் மேய்ந்துவிடுகின்றன. இதனால் வெள்ளாடுகள் வளர்ப்பதைத் தவிர்த்தால் கிராமம் பசுமையாகும் என்று கிராமம் கூடி முடிவெடுத்தோம். அதாவது 2017ஆம் ஆண்டு கிராமம் முடிவெடுத்தது அப்போது அரசாங்கமே வெள்ளாடுகளைக் கொடுத்தது. அதனால் அதற்காக சில மாதங்கள் தளர்வு கொடுத்தோம். 

 

அந்த ஆடுகளை வளர்த்து விற்றதோடு முற்றிலும் வெள்ளாடுகளைத் தவிர்ப்போம். வெள்ளாடுகள் வளர்த்த சாதாரண குடும்பத்திற்கும் வருமானத்திற்காக பால் மாடுகளை வளர்த்தால் பால் விற்பதோடு வயலுக்கு நல்ல எரு கிடைக்கும் என்று முடிவெடுத்து வீட்டுக்கு வீடு பால் மாடுகளை வளர்க்கத் தொடங்கினோம். ஒருநாளைக்கு குறைந்தது 600 லிட்டர் பால் கறந்து பண்ணையில் ஊற்றி வருமானம் ஈட்டுகிறோம்.

pudukkottai district village peoples goats

 

வெள்ளாடுகள் வளர்ப்பதை நிறுத்திய பிறகு மரக்கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன. இயற்கை உரத்தோடு பயிர்களும் செழித்து வளர்கின்றன. கல்லறை தோட்டத்தில் 100 வகையான கன்றுகளை நட்டு குருங்காடு வைத்து வளர்க்கிறோம்" என்றார்.

 

அவர் சொன்னது போலவே 30 கிணறு வெட்டி மின்மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து விவசாயம் செய்கிறார்கள் விவசாயிகள். மரங்களும் நிறைய வளர்ந்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.