![pudukkottai district river cleaning process government fishermans](http://image.nakkheeran.in/cdn/farfuture/iM-WkrNwnCHFNf7fUopm6bQ5bSJQ_5Du-SAvg8Fqe5s/1618748295/sites/default/files/inline-images/bagath32.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் பேரிடர் காலங்களில் தங்களது நாட்டுப் படகுகளை கடல் கரையில் நிறுத்தாமல் பாதுகாப்பாக ஆறு வழியாக கொண்டு வந்து ஊருக்குள் நிறுத்திக் கொள்வது வழக்கம்.
ஆனால் அந்த ஆற்றின் முகத்துவாரம் பல வருடங்களாக தூர்வாராமல் கிடப்பதால் படகுகள் கொண்டு செல்ல முடியவில்லை என்று அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பயனில்லை என்பதால் நேற்று (17/04/2021) மாலை அய்யம்பட்டினம் நாட்டுப் படகு மீனவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரரென்று சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளிடம் தங்களிடம் இருந்த ஆதார், குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினர் மீனவர்களை வெளியேற்ற நினைத்த போது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் ஆதார், குடும்ப அட்டைகளை வீசி எறிந்துள்ளனர். சில மீனவர்கள் தங்கள் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர் காவல்துறையினர். அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.மேலும் அருகில் உள்ள ஏம்பவயல் மீனவர்களும் ஒரே ஆற்றில் படகுகளை நிறுத்துவதால், அதனாலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.