Skip to main content

‘வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி மட்டும் வருகிறது’ - ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

the public who besieged the ration shop

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு ரேஷன் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு, கோதுமை, ரவை என அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களை மாதம்தோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கி வர வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக மேற்படி பொருட்கள் இருப்பு இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களிடம் கடையின் விற்பனையாளர் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

 

ஆனால் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அவர்களின் செல்ஃபோனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் மட்டும் வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள், நேற்று (23.11.2021) காலை அந்த ரேஷன் கடை விற்பனையாளரிடம் சென்று “பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக எங்கள் செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி மட்டும் வருகிறது. ஆனால் நாங்கள் பொருட்கள் எதுவும் உங்களிடம் வாங்கவில்லை, நீங்களும் கொடுக்கவில்லை” என்று நியாயம் கேட்டனர். இதனால் விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற பொதுமக்கள் ரேஷன் கடையை இழுத்து மூடி பூட்டிவிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, “உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பொருட்களும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். ரேஷன் கடைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மற்ற நாட்களில் ரேஷன் கடை திறந்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி எந்த விற்பனையாளர்களும் தங்கள் கடைகளைத் திறந்து வைப்பதில்லை. இதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டின் பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ளது. அரசு உத்தரவைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தங்கள் இஷ்டம் போல ரேஷன் கடையை நடத்துகிறார்கள் அதன் விற்பனையாளர்கள் என்பது குடும்ப அட்டைதாரர்கள் கூறும் குற்றச்சாட்டு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.