Skip to main content

மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

சில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா’ என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. அந்த வரியை எழுதியவர் ‘வைரமுத்து’ என்று குறிப்பிட்டிருந்தனர். முதியவர் ஒருவரின் படத்தைப் போட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்று அச்சிட்டிருந்த அந்தப் போஸ்டரில், அந்த முதியவரின் பெயர் ஏனோ இடம்பெறவில்லை. 

 

poster

 

‘அவர் யாராக இருக்கும்?’ என்று மனதில் அசைபோட்டபடியே அந்தப் போஸ்டரைக் கவனித்த வெளியூர்க்காரர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.  இன்றோ, அந்தப் போஸ்டரில் இருந்த பெரியவரின் முகத்தையும், வீரமடா என்ற வார்த்தையையும் யாரோ கிழித்திருந்தனர். ஆம். போஸ்டரில் பறைசாற்றப்பட்ட வீரம்,  யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை இச்செயல் உணர்த்துகிறது. 

யார் அந்த முதியவர்? மதுரைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பெயர் நல்லகண்ணு சேர்வை.  ‘மதுரை மண்ணின் அழிக்க முடியாத அடையாளம் மாவீரன் ஐயா நல்லகண்ணு சேர்வை’ என்று ஒரு சமூகத்தினரால் அவர் கொண்டாடப்படுகிறார். மாவீரன் என்ற பட்டம் நல்லகண்ணு சேர்வைக்குக் கிடைத்த பின்னணியைப் பார்ப்போம். 

 

 Posters of heroism in Madurai

 

‘வீரதீர பராக்கிரமம்’ நிறைந்தவராகவும், முதுமைக் காலத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு சேர்வை. பருத்தி வீரன் என்ற பெயரில் சினிமா ஒன்று வந்ததல்லவா! நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா! அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா? நெல்பேட்டை சீனி என்பவர் மிகப்பெரிய தாதாவாக மதுரையில் வலம் வந்தவர்.  தற்போது, மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் அத்தனை தாதாக்களும் நெல்பேட்டை சீனியின் சிஷ்யர்கள்தான்.

 

 Posters of heroism in Madurai

 

நெல்பேட்டையில் இருந்து  ‘பேட்ட’–ஐ உருவி ரஜினி படத்தின் தலைப்பாக வைத்தார் மதுரைக்காரரான கார்த்திக் சுப்புராஜ். பேட்ட சினிமாவில் நெல்பேட்டை சீனி வாழ்க்கையோடு தொடர்புடைய சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட நெல்பேட்டை சீனியும்கூட, நல்லகண்ணு சேர்வையின் வார்ப்புதான்.  எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்று அப்போது சவால் விட்டார் மேயர் முத்து. எம்.ஜி.ஆரையே எதிர்த்த முத்துவின் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் பின்னால் இருந்தவர் நல்லகண்ணு சேர்வை என்று நிறையப் பேசுகிறார்கள் மதுரைவாசிகள்.  

 

 Posters of heroism in Madurai

 

 Posters of heroism in Madurai

 

வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் மதுரைக்காரர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது.  இத்தனை வீரதீர பின்னணி கொண்ட நல்லகண்ணு சேர்வைக்கு போஸ்டர் ஒட்டாமல் இருப்பார்களா? ஆனாலும், இதுபோன்ற போஸ்டர்களுக்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது.  ‘நீ வீரன் என்றால் நான் கோழையா?’ என்ற கோபம்தான் போஸ்டர் கிழிப்புக்குக் காரணமாக இருக்கிறது. 

 

போஸ்டரை சீரியஸாக எடுத்துக்கொள்வதெல்லாம் தமிழகத்தில் சகஜமானதுதான்! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.