பொள்ளாச்சி சம்பவம் போல் சேலத்தில் ஒரு இளைஞர் பெண்களை மொபைல் போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒரு பெண்ணிடம் அவர் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியபோது அவரை இளைஞர்கள் சிலர் கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள சலூன்கடையின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பெண்களிடம் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் செல்போனில் வீடியோ காலில் ஆபாசமாக பேசி, அதை பதிவு செய்துகொண்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். பள்ளி மாணவியிடமும் இப்படி வீடியோ எடுத்து மிரட்டி வந்ததும், அம்மாணவியின் தாய் அப்பகுதி்யில் உள்ள பலரிடம் சொல்லி அழுதுள்ளார்.

இந்நிலையில், வீடியோவை காட்டி ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு நல்லதம்பி மிரட்டி வந்தபோது, அழகாபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நல்லதம்பியை கையும் களவுமாக மடக்கி பிடித்து, அடித்து உதைத்து அழகாபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு பெண் மட்டுமே தற்போது நல்லதம்பி மீது அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

நல்லதம்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் 30க்கு மேல் இருக்கலாம் என்றும், அவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால் நல்லதம்பிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.