Skip to main content

ஃபீனிக்ஸ் பறவையாக டில்லியில் சிலிர்த்தெழுந்த வைகோ! -மாநிலங்களவையில் கர்ஜனை ஆரம்பம்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

“கிவ் ஆன்ஸர் டு மை கொஸ்டின்..” என, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை கேள்விகளால் துளைத்தெடுத்தவர் வைகோ. ராஜீவ் காந்தி மட்டுமல்ல. எந்தத் தலைவரும் அவருடைய கேள்விக்குத் தப்ப முடியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய குரல் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலித்திருக்கிறது. 

 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தமிழில் உளமார உறுதிகூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இன்று கேள்வி நேரத்தின்போது, இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்த கேள்வி, 347-வது கேள்வியாகும்.  ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் துணைக்கேள்வி எழுப்பினார் வைகோ. 

 

 Phoenix bird mdmk party general secretary vaiko raise the question with rajya sabha

 

 

“அவைத்தலைவர் அவர்களே!  23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.” என்று வைகோ பேச ஆரம்பித்தவுடன், அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி மேஜையைத் தட்டி வரவேற்றார். 

 

வைகோ நூற்பு ஆலைகள் குறித்துப் பேசியபோது, “பருத்தி விலை, பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி தருகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படி  பின்பற்றுவது இல்லை. இதனால்,  தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்று கூறிவிட்டு, “இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்றுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேட்டபோது, உடனடியாக அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்தார். 

 

 Phoenix bird mdmk party general secretary vaiko raise the question with rajya sabha

 

 

தொடர்ந்து, “சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளைக் குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?” என்று வைகோ கேட்க, “அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை.” என்றார் ஸ்மிருதி இரானி. அதற்கு, “உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை.” என பட்டென்று சொல்லிவிட்டார் வைகோ. 

 

டில்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போன்ற தலைவர்களைச் சந்தித்து உறவைப் புதுப்பித்துக்கொண்ட வைகோ, மாநிலங்களவையில் மீண்டும் கர்ஜிக்க ஆரம்பித்திருக்கிறார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்